அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி ஏன் தெரியுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன விளக்கம்!
தஞ்சை: அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிப்பதன் நோக்கம் மாணவர்களின் கட்டண நிதிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி ஒரு பக்கம் சட்டப் போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்தாலும் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்கான முயற்சிகளையும் மற்றொரு பக்கம் முன்னெடுத்துள்ளது.

நீட் தேர்வு பயிற்சி தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது; ''நீட் தேர்வு பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளிக்கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனரகம் மேற்கொள்ளும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தனியாக வினாத்தாள் தயாரித்து, தினசரி தேர்வுகள் நடத்தப்படும்.''
''ஆன்லைன் வழியிலும் பாடங்கள் நடத்தப்படும். அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, நான்கு ஆசிரியர்கள் வீதம், மாநில அளவில், 20 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவர். அனைத்து வேலை நாட்களிலும், மாலை,4:00 முதல், 5:30 மணி வரை பள்ளிகளிலேயே பாடவாரியாக வகுப்புகள் நடக்கும்.'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு பயிற்சியை அரசுப் பள்ளிகளில் வழங்குவது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்தார். அரசுப் பள்ளி மாணவர்களால் வெளியே தனியாரிடம் 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய முடியாது என்பதாலும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் நடப்பினும் கூட அதுவரை மாணவர்களை நீட் தேர்வுக்கு தயாராகும் வகையிலும் தான் இப்பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறில்லை என நீதிமன்றமே தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications