மது குடித்த 2 பேர் பலியான விவகாரம்.. பார் + டாஸ்மாக் கடைக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன்!
தஞ்சாவூர் : தஞ்சையில் கீழஅலங்கம் பகுதியில் உள்ள பாரில் மதுபானம் வாங்கிக் குடித்த 2 பேர் இன்று பலியான நிலையில், சட்டவிரோத மதுபானம் விற்றதாக பாருக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
தஞ்சையில் அரசு அனுமதி பெற்ற பாரில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் இன்று பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் விஷச் சாராயம் குடித்த 23 பேர் பலியான நிலையில் இன்று டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்துனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. அதற்கு எதிரே உள்ள பாரில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரத்திற்கு முன்பே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60) மற்றும் விவேக் (35) ஆகிய இருவரும் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் இன்று காலை 11 மணியளவில் கடை திறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.
மதுபானத்தை குடித்ததுமே குப்புசாமி வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குப்புசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விவேக்கும் மயங்கி விழுந்த நிலையில், அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள அரசு அனுமதி பெற்ற பாரில், அனுமதி நேரத்திற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைத்த நிலையில் அதற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications