நெஞ்சை உலுக்கிய தஞ்சை விபத்து! KFC-யில் ஏசி சிலிண்டர் வெடித்து எலக்ட்ரீஷியன் பலி! 5 பேர் காயம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பிரபல கே.எஃப்.சி (KFC) உணவகத்தில் ஏசி கேஸ் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்து நேரிட்ட கோர விபத்தில், கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சையில் இருந்த எலெக்ட்ரீஷியன் ரவிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தின் தரைத்தளத்தில் கே.எஃப்.சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் சமையல் கூடத்தில் இருந்த ஏசி-யில் பழுது ஏற்பட்டதால், அதனைச் சரி செய்யும் பணி நடைபெற்றது.

நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கணேசன் (43) என்பவர் ஏசியில் கேஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
வெடித்துச் சிதறிய கண்ணாடிகள்: 6 பேர் படுகாயம்!
சிலிண்டர் வெடித்த அதிர்வில் உணவகத்தின் ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக நொறுங்கின. ஏசி பாகங்களும் நாலாபுறமும் சிதறி விழுந்தன.
இந்த விபத்தில் ஏசி மெக்கானிக் கணேசன் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தார். அவருடன் சேர்த்து, அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் உணவு விநியோக ஊழியர்கள் (Delivery Boys) என மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் விவரம்:
கணேசன் (43) - ஏசி மெக்கானிக்
ரவிராஜ் (34) - கே.எஃப்.சி எலெக்ட்ரிக் ஊழியர் (தற்போது உயிரிழந்துள்ளார்)
அருண்குமார் (26) - கே.எஃப்.சி ஊழியர்
கதிரேசன் (24) - ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்
பிரேம் (26) - ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்
அஜித்குமார் (22) - ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்
விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும், தெற்கு காவல் நிலைய போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் போது ஏசி சீரமைப்புப் பணியைக் கண்காணித்துக் கொண்டிருந்த கே.எஃப்.சி-யின் எலெக்ட்ரிக் ஊழியர் ரவிராஜுக்கு (34) தலையில் மிகக் கடுமையான காயம் ஏற்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே கடையில் பணியாற்றி வந்த இவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், நிலைமை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
விபத்து நடந்த இடத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு விரைவாகவும் தரமாகவும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் கூறியிருப்பதாவது: "இந்தத் துயரமான விபத்து குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்த இளைஞர் ரவிராஜின் குடும்பத்திற்கும் அரசுத் தரப்பில் இருந்து உரிய நிவாரண உதவி வழங்கக் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இந்த விபத்து குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications