வீடியோ கால் டெக்னிக் மூலம் அப்பருக்கு சிவபெருமான் காட்சி.. ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு
தஞ்சை : வீடியோ கால் டெக்னாலஜி மூலம் அப்பருக்கு சிவன் காட்சியளித்தார் என புதுவை துணை நிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தியாகராஜரின் 176 ஆவது ஆராதனை விழா நேற்று நடைபெற்றது. இதை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தவர் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன். இந்த விழாவில் தமிழிசை பேசுகையில், இந்து மதத்தில் உள்ளனவற்றை எல்லாம் அனைவரும் அறிந்ததா?
அதற்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள். அப்பருக்கு கைலாயத்தில் இருந்து கொண்டே சிவன் காட்சி கொடுத்துள்ளார். இன்று நாம் அனைவரையும் காணொலி மூலம் காண்கிறோம்.
சிவன்
ஆனால் அன்றே சிவன் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்பருக்கு காட்சி அளித்துவிட்டார். எனவே அனைத்தும் நம்பிக்கை மட்டுமல்ல, அதிகாரப்பூர்வமாக ஆதாரத்துடன் உள்ளது. நாம் எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். மற்ற மதத்தில் உள்ள நல்லதுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும்.
தெலுங்கு
தமிழிசை தெலுங்கும் பேசலாம். தெலுங்கு பேசும் நண்பர்கள் தமிழும் பேசலாம். அப்படிப்பட்ட சூழல்தான் தமிழகத்தில் உருவாக வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். வடக்கும் தெற்கும் இணைந்து செயல்பட்டால்தான் நாடு சுபிட்சமாக இருக்கும் என்று அன்றே சொல்லி வைத்தார்கள். தமிழ் நமக்கு உயிர்தான்.
மற்ற மொழிகளை கற்க!
ஆனால் மற்ற மொழிகளையும் நாம் கற்க வேண்டும். அதனை மதிக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்கும்போது தான் தமிழில் உள்ள நல்லதை வடமொழியில் நம்மால் எடுத்துக் கூற முடியும். கம்பன் வடமொழியை கற்காவிட்டால் கம்பராமாயணம் நமக்கு கிடைத்திருக்காது. புதிய கல்விக் கொள்கையை தமிழிலும் தாய் மொழியிலும் கற்றுக் கொள்ளுங்கள்.
தயக்கம் வேண்டாம்
பிற மொழியை கற்றுக் கொள்ள தயக்கம் காட்ட கூடாது. இன்னொரு மொழியை கற்றுக் கொள்ள தயக்கம் காட்டக் கூடாது. இன்னொரு மொழியை கற்பதால் வாய்ப்புகள் நமக்கு அதிகமாக இருக்கிறது. மற்றொரு மொழியை கற்பதை யாரும் தடுக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்தார். இந்தி மொழியை திணிக்கக் கூடாது என தமிழக அரசு கூறி வருகிறது.
மொழியை திணிக்கக் கூடாது
இந்த நிலையில் எந்த மொழியையும் திணிக்க வில்லை, மொழியை கற்றால் நல்லது என்றுதான் கூறுகிறோம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இது தொடர்பாக சமூகவலைதளங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் இந்த பிரச்சினை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை உருவாக்குவதற்கும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.