சிசிடிவி, வைஃபை, வாஷிங் மெஷின்! கம்மி பட்ஜெட்டில் பாதுகாப்பான ‘தோழி’ விடுதி! எப்படி விண்ணப்பிப்பது?
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை ரோடு, மேலவஸ்தாசாவடி, தெற்கு தெரு என்ற முகவரியில் தோழி விடுதி 13.07.2023 அன்று முதல் செயல்பட்டு வரும் நிலையில், உழைக்கும் பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன எனவும், இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே பெண்கள் தங்குவதற்கான 'விடுதி'களை தமிழ்நாடு அரசு முதன்முறையாக அமைத்துள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உழைக்கும் மகளிருக்காக தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பெண்கள் தங்குவதற்காகத் திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் 11 தங்கும் விடுதிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தோழி விடுதியில் தங்க உழைக்கும் பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா வசதியுடன் குறைந்த வாடகையில் தோழி விடுதி கிடைக்கிறது. உழைக்கும் பெண்களிடம் இருந்து விண்ணப்பம் நேரிடையாக வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பணிபுரியும் மகளிருக்கான விடுதி "தோழி" என்ற பெயரில் 2020ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த விடுதியானது பல்வேறு ஊர்கள், மாவட்டங்கள், மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள், பயிற்சிக்காக வருபவர்கள், படிக்கும் மாணவர்கள், பணிநிமித்தமாக ஒன்று, இரண்டு நாட்கள் தங்கும் மகளிர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு முயற்சி ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை ரோடு, மேலவஸ்தாசாவடி, தெற்கு தெரு என்ற முகவரியில் தோழி விடுதி 13.07.2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 60 படுக்கைகள் கொண்ட படுக்கை அறைகள் உள்ளது. மேலும் தங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் பெண் விடுதி மேலாளர், பாதுகாப்பு காவலர், 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் பயோமேட்ரிக் உள்நுழைவு வசதி உள்ளது.
மேலும் விடுதியில் சுத்தமான குடிநீர் வசதி (RO Water). அயனிங் வசதி, வாஷிங் மெஷின் வசதி, கெய்சர் வசதி (water Heater), இலவச wifi வசதி, பார்க்கிங் வசதி மற்றும் 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். விடுதியில் 2 பேர் தங்கும் வசதி, 4 பேர் தங்கும் வசதி உள்ளது. உணவு கட்டணங்கள் தவிர்த்து 2 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறைக்கு வாடகையாக மாதம் ரூ.3,500ம். 4 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறைக்கு வாடகையாக மாதம் ரூ.2,500ம், என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது. இது விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கான இல்லமாக செயல்படுகிறது.
விடுதியில் தங்கும் சேவையை பெற பயனர்கள் www.tnwwhcl.in என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் தங்கள் விவரங்களை உள்ளிடலாம் அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications