கையில் மனுவோடு கால் கடுக்க காத்திருக்க வேண்டாம்! வீடு வீடாக கியூ.ஆர்.கோட் ஒட்டிய தஞ்சை மேயர்!
தஞ்சாவூர்: பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே தங்கள் புகார்களை மாநகராட்சிக்கு தெரிவிக்கும் வகையில் குடியிருப்புகளில் கியூ.ஆர்.கோட் ஒட்டும் பணிகள் தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 45 வார்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்ற தஞ்சை மேயர் சன் ராமநாதன், தனது கைப்படவே கியூ.ஆர்.கோட் ஸ்டிக்கரை ஒட்டியதோடு அது குறித்த விளக்கத்தையும் மக்களுக்கு அளித்தார்.

பலருக்கும் கியூ.ஆர்.கோட் என்றால் என்ன, எதற்காக வீட்டுக் கதவில் ஒட்டப்படுகிறது என்ற விவரம் புரியாமல் முழித்தனர். இதனைக் கவனித்த மேயர் சன்.ராமநாதன், கியூ.ஆர்.கோட் என்றால் என்ன, இதன் மூலம் எப்படி புகார்களை தெரிவிக்கலாம் என்பது பற்றியெல்லாம் பொறுமையாக விளக்கிக் கூறினார்.
அதுமட்டுமல்ல சொத்துவரி, குடிநீர் வரி கட்ட இனி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து அலைய வேண்டியதில்லை என்றும் இருந்த இடத்தில் இருந்தவாறே கியூ.ஆர்.கோடை அலைபேசி மூலம் ஸ்கேன் செய்து கட்டிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
மாநகராட்சிகளில் கியூ.ஆர்.கோட் சிஸ்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தும் பணிகள் அனைத்து மாநகராட்சிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேபோல் அதிகாரிகளை பார்க்கவும், மேயரை பார்க்கவும் கையில் மனுவோடு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்பது இந்த கியூ.ஆர்.கோடின் சிறப்புகளில் ஒன்றாகும்.
தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரை இந்த கியூ.ஆர்.கோட் ஸ்கேனிங் சிஸ்டம் பெண்கள், முதியோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த நடைமுறையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறார் மேயர் சன் ராமநாதன்.












Click it and Unblock the Notifications