8,000 பேருக்கு மட்டன், குடல் கிரேவி! களைகட்டிய மொய் விருந்து! ரூ.10 கோடி கரன்சி எண்ணிய திமுக எம்எல்ஏ
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நடத்திய மொய் விருந்தில் ரூ.10 கோடி வரை வசூலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.
35 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லட்சம் மொய் சேர்ந்தாலே அது பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்ட நிலையில் இன்று சர்வ சாதாரணமாக கோடிகளிலும், பல லட்சங்களிலும் மொய் வசூலாகி வருகிறது.

திமுக எம்.எல்.ஏ.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அசோக் குமார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்துவது இவரது வழக்கம். அதேபோல் தன்னை யார் மொய் விருந்துக்கு அழைத்தாலும் தவறாமல் அங்கு சென்று தாராளமாக மொய் செய்து விட்டு வரக்கூடியவர் இவர். இந்நிலையில் தனது பேரப்பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்தியதுடன் கூடவே மொய் விருந்தையும் சேர்த்து நடத்தி முடித்திருக்கிறார் அசோக் குமார் எம்.எல்.ஏ.

8,000 பேருக்கு விருந்து
100 ஆடுகள் வெட்டி மட்டன் குழம்பு, குடல் கிரேவி என தடபுடலாக 8,000 பேருக்கு கறிச்சாப்பாடு பரிமாறியிருக்கிறார் அசோக் குமார் எம்.எல்.ஏ. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு வடை பாயாசத்துடன் தனியாக சைவ உணவு ஏற்பாடு செய்து விருந்து வைத்திருக்கிறார். இதனிடையே மொய் விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் ரூ.1,000 -ல் தொடங்கி ரூ.5 லட்சம் வரை அவரவர் வசதிக்கேற்ப மொய் செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

பொருளாதார ரீதியாக
பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள உறவுமுறைகளையும், நண்பர்களையும் கை தூக்கிவிடும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து மொய் விருந்துகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மொய் விருந்துகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு யாரிடமும் கடன் பெறாமல் தொழில் தொடங்கி வெற்றிக்கண்டவர்கள் ஏராளம். மொய் விருந்தை மேலோட்டமாக பார்க்கும் போது அது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் தெரிந்தாலும் அதன் பயனும், நன்மையும் அதனை உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

பலருக்கும் வருவாய்
மொய் விருந்துகள் மூலம் சமையல்காரர்கள், பந்தல்காரர்கள், ஒலி பெருக்கி ஏற்பாட்டாளர்கள், அரிசி வியாபாரிகள், ஆட்டுக்கறி விற்பனையாளர்கள், மொய் எழுத்தர்கள், பந்தல் அலங்கார வடிவமைப்பாளர்கள், விறகு விற்பவர்கள், பிளக்ஸ் தயாரிப்பாளர்கள், என பல தரப்பட்டோரும் பயன் அடைந்து வருவாய் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications