அடுத்தடுத்து விவசாயிகள் மரணம்.. தீராத சோகத்தில் தஞ்சை!
தஞ்சை: அடுத்தடுத்து ஏற்படும் விவசாயிகளின் மரணம் ஒட்டுமொத்த டெல்டாவாசிகளையும் பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.
கஜா புயலின் கோர தாண்டவத்தில், பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. இதில் இருந்து மீளாத, விவசாயிகள் வேதனையில் மூழ்கி உள்ளனர். பல விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் இருந்து மரங்களை அகற்றி வருகின்றனர்.
ஆனாலும் விவசாயிகள் சிலர் மனம் வெம்பி தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர ராஜன் என்ற விவசாயி, மனம் வெதும்பி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
வன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி 52, வாழ்வாதாரமாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் புயலில் நாசமானதால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட்டார். இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
இந்நிலையில் இன்று காலை, ஒரத்தைநாடை அடுத்த திருமங்கலக்கோட்டை கிராமத்தில் நடராஜன் என்பவர் விழுந்த தென்னை மரத்தை அகற்றும்போது பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது தென்னை சாய்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல, மன்னார்குடி அடுத்துள்ள எடமேலையூரில் புயலில் சம்பா பயிர் சேதமடைந்த சோகத்தில் விவசாயி செல்வராஜ், 55 என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஏற்கனவே வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களிடையே இப்படி விவசாயிகளின் அடுத்தடுத்த மரணங்கள் அவர்களை ரொம்பவே உலுக்கி போட்டுள்ளது.