வீடியோ இருக்குதாம்.. தஞ்சை மாணவியை மதம் மாற சொல்லி கொடுமை என அண்ணாமலை கருத்து- போலீஸ் மீது விமர்சனம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதமாற்ற பின்னணி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு வாரங்களுக்கு முன் பூச்சு மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று முதல்நாள் பலியானார். இந்த மாணவி பலியான விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவிக்கு ஹாஸ்டல் வார்டன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், அறைகளை சுத்தம் செய்ய சொல்லி கொடுமை படுத்தியதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

மத மாற்றம்
அதே சமயம் அந்த மாணவியை மதம் மாற சொல்லி ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி வார்டன் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதாக தகவல் இல்லை, முதற்கட்ட விசாரணையில் இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவியின் அடையாளங்களை வெளியிடுவது தவறு, என்று தஞ்சாவூர் எஸ்பி ராவலி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாணவி
இந்த நிலையில் தஞ்சாவூர் +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதமாற்ற பின்னணி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை செய்துள்ள ட்வீட்டில், ஏழை விவசாயி மகள் (பெயர் நீக்கப்பட்டுள்ளது), வயது 17, அரியலூர் மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அண்ணாமலை கேள்வி
பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி.

மத மாற்றம் புகார்
ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்! இந்த வழக்கில் முறையற்ற கருத்துக்களை தெரிவித்து தமிழ்நாடு போலீஸ் தனது நற்பெயரை கெடுத்துக்கொள்கிறது. அந்த மாணவி தான் மத மாற்றம் காரணமாக இப்படி செய்ததாக வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மாணவி வீடியோ
ஆனால் லோக்கல் போலீஸ் இந்த வழக்கை கஷ்டப்பட்டு திசை திருப்ப பார்க்கிறது. இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை?அந்த மாணவி வாக்குமூலம் கொடுத்த வீடியோ இருக்கிறது. எஸ்பி இந்த வீடியோ பொய்யானது என்று சொல்கிறாரா? எப்படி சொல்கிறார்? பெற்றோர்கள், மாணவியின் உறவினர் இதே விஷயத்தை தங்கள் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால் மாணவியின் பெற்றோர் பொய் சொல்வதாக எஸ்பி கூறுகிறாரா? ரொம்ப வருத்தமாக இருக்கிறது மேடம்.. என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications