தஞ்சையில் திடீரென வெடித்து சிதறிய வாஷிங் மெஷின்! தீக்கிரையான அறை! பரபரப்பு
தஞ்சை: தஞ்சையில் நடுவீட்டில் வாஷிங் மெஷின் வெடித்து சிதறியதால் அந்த அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் தீயில் எரிந்து நாசமடைந்தன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழ்வாசல் கவாஸ்காரர் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவர் அந்த பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். சிவகுருநாதனின் வீட்டின் கீழே தளத்தில் அவருடைய மாமனார், மாமியார் உள்ளிட்டோர் வசித்து வருகிறார்கள்.

சிவகுருநாதன் மாடியில் தன் மனைவி புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புவனேஸ்வரி வீட்டில் உள்ள வாஷிங் மெஷினில் துணியை போட்டுவிட்டு வாக்கிங் சென்றுவிட்டார்.
அவர் வீட்டை விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே வாஷிங் மெஷின் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிவகுருநாதன் பயங்கர வெடிசப்தம் கேட்டு எழுந்தார். வாஷிங் மெஷின் வெடித்து தீப்பற்றி எரிவதைக் கண்டார்.
உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்புத் துறையின் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்துள்ளனர். இந்த விபத்து நடந்த அறையில் சோபா, டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்ட பிற பொருட்களும் தீயில் கருகிவிட்டன.
நல்வாய்ப்பாக அந்த அறையில் யாரும் இல்லாத காரணத்தால் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாஷிங் மெஷின் வெடிப்புக்கு மின்கசிவு காரணமாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. வாஷிங் மெஷின் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் கீழ்வாசல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மின் கசிவு காரணமாக வெடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் மின் சாதன பொருட்களை அவ்வப்போது பழுது பார்த்து பராமரித்தல் அவசியம் என்கிறார்கள். மேலும் அளவுக்கு அதிகமான லோடுடன் இயந்திரங்களை இயக்கக் கூடாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications