தஞ்சாவூரில் தலைய நீட்டிய இந்த ஒட்டகத்தை யாராச்சும் பார்த்தீங்களா? சர்க்கஸ் கூடார ஒட்டகம்! தஞ்சை பரபர
தஞ்சாவூர்: செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லாரியை மீட்க 15 கிலோமீட்டர் தூரம் லாரியில் போலீஸ்காரர் தொங்கியபடி சென்றுள்ளார்.. உயிரை பணயம் வைத்து லாரியில் தொங்கிக்கொண்டு போகும் போலீஸ்காரரின் இந்த வீடியோவை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்படி மிகப்பெரிய வாகன திருட்டுகளுக்கு நடுவில் வித்தியாசமான திருட்டு ஒன்று தஞ்சாவூரில் நடந்துள்ளது. அதுதான் ஒட்டக திருட்டு.
கால்நடைகள் திருட்டு கேள்விப்பட்டிருப்போம்.. அதிலும் ஆடுகள் திருட்டுதான் தமிழகமெங்கும் அதிகமாகி கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம், ஒரு ஆட்டின் விலை ஆயிரக்கணக்கில் விற்பனை போவதால், ஆடுகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது..

கால்நடைகள் திருட்டு
பெரும்பாலும், கார்களில் வந்து ஆடுகளை மர்மநபர்கள் திருடி செல்வது பெருகி வருகிறது.. எந்தெந்த பகுதியில் ஆடுகள் உள்ளன? எவ்வளவு ஆடுகள் இருக்கின்றன? எங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன? என்ற விவரங்களையும் முன்கூட்டியே வந்து மர்மநபர்கள் நோட்டமிட்டு, சமயம்பார்த்து, நள்ளிரவில் வாகனங்களை கொண்டு வந்து ஆடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு கடத்தி சென்றுவிடுவதாக போலீசுக்கு புகார்களும் போய் கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ஒட்டகத்தை ஒருவர் திருடியிருக்கிறார்.. கரூர் மாவட்டம் வேட்டமலிக்களத்தை அடுத்துள்ளது நத்தமேடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் அழகர்... இவர் ஒரு சர்க்கஸ் கலைஞர் ஆவார்.. இவருடைய குடும்பமே சர்க்கஸ் குடும்பம் ஆகும்.. தன்னுடைய மகன்கள், குடும்பத்தினருடன் கிளம்பி, ஒவ்வொரு ஊரிலும் சர்க்கஸ் நடத்தி வருபவர் ஆவார்.
சர்க்கஸ் ஒட்டகம்
ஆனால், தற்போது சர்க்கஸூக்கு முன்புபோல் வரவேற்பு கிடைப்பதில்லை.. இதனால், அழகர் குடும்பமே சர்க்கஸ் நடத்த முடியாமல், போதிய வருமானமும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளது.. எனினும், வேறு பிழைப்பு இல்லாததால், தொடர்ந்து இதே சர்க்கஸ் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊரிலும் 10 நாட்கள் கூடாரம் போட்டு நடத்தி வருகிறார்..
இதற்காக ஒட்டகம், குதிரை போன்றவற்றையும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வார்.. தினம் தினம் சர்க்கஸ் முடிந்ததுமே, ஒட்டகம், குதிரையை சர்க்கஸ் கூடாரத்திலேயே கட்டி வைத்துவிடுவார்.. ஆனால், வெளியாட்கள் யாரையுமே சர்க்கஸுக்குள் சேர்த்து கொள்ளாமல், தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 10 பேரை வைத்து, சர்க்கஸ் நடத்தி வருவதாக தெரிகிறது.
ஒட்டகம் குதிரை
அந்தவகையில், தஞ்சையை அடுத்த கீழவஸ்தாச்சாவடியில் சர்க்கஸ் நடத்துவதற்காக அழகர் கூடாரம் போட்டிருக்கிறார்.. சர்க்கஸில் பயன்படுத்தப்படும் ஒட்டகத்தை சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக அழைத்து வந்துள்ளார்.. இந்த ஒட்டகத்தை கடந்த 7 வருடமாக அழகர் பராமரித்து வந்துள்ளார்.. கடந்த 15ம் தேதி இரவு நிகழ்ச்சி முடித்துவிட்டு, வழக்கம்போல் ஒட்டகத்தை கூடாரத்தின் ஒரு பகுதியில் கட்டி வைத்துவிட்டு, அன்றைய தினம் இரவு, குடும்பத்தினர் தூங்க சென்றிருக்கிறார்கள்..
ஆனால், மறுநாள் காலையில் கட்டி வைத்திருந்த ஒட்டகம் மாயமாகியிருந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த அழகர், தன்னுடைய ஒட்டகத்தை பல்வேறு இடங்களில் தேடினார்.. எங்கியுமே ஒட்டகம் கிடைக்கவில்லை... இறுதியில், இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் குடும்ப உறுப்பினர் விஜய் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒட்டகத்தை திருடி சென்றவரை தேடும் பணியை துவங்கியிருக்கிறார்கள்.
வேட்டி - சட்டை
அதேபோல, சர்க்கஸ் நடத்தப்பட்ட கூடாரம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீஸார் ஆய்வு செய்தனர்.. அப்போது, வேட்டி, சட்டை அணிந்த நபர் ஒட்டகத்தை ஓட்டி செல்வது பதிவாகி இருந்தது... அந்த கேமராவின் ஆதாரத்தை வைத்து, மர்ம நபரை தேடும் பணி தீவிரமாகியிருக்கிறது...
அவ்வளவு பெரிய ஒட்டகத்தை எப்படி கடத்தி செல்ல முடியும்? அதை எப்படி தீனி போட்டு பேணிக்காக்க முடியும்? தொழில் போட்டியால் ஒட்டகம் திருடு போயிருக்குமோ? அல்லது குடும்பத்தினரை மட்டுமே வைத்து சர்க்கஸ் நடத்துவதால், பொறாமையால் யாராவது இந்த கடத்தலில் ஈடுபட்டிருப்பார்களா? என்கிற குழப்பங்களும், சந்தேகங்களும் தஞ்சை பகுதியில் கிளம்பியிருக்கிறது.. இதனிடையே, "யாராவது என் ஒட்டகத்தை எங்காவது பார்த்தால் தகவல் சொல்லுங்கள்" என்று அழகர் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications