ஓபிஎஸ்ஸை அசிங்கப்படுத்திட்டீங்க.. எடப்பாடிக்கு ஆதரவு கிடையாது- கண்டித்து போஸ்டர் ஒட்டிய டெல்டா ஒ.செ!
தஞ்சாவூர் : அதிமுக பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரை அவமதித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினரைக் கண்டித்து, அவர்களுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஒன்றிய செயலாளர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அச்சுறுத்தல் நிகழ்வுகள், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்துவந்த தஞ்சை தெற்கு மாவட்டம், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் அவமானம்... இன்று இரவு டெல்லி செல்லும் ஓ பன்னீர் செல்வம்! பரபர பின்னணி
பொதுக்குழுவில்
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே பல்வேறு கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்த நிலையில், முக்கிய நிர்வாகிகளும், தன்னை அவமதிக்கும் வகையிலேயே நடந்துகொண்டதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக அப்செட் ஆனார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கி ஒலித்த நிலையில், தீர்மானங்களை நிறைவேற்றாமலேயே பொதுக்குழு கலைந்தது.
கலைந்தது
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை இன்றே முடிவு செய்ய வேண்டும் என்றும் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் சி.வி.சண்முகம் முன்வைத்தார். இதனையடுத்து வரும் ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.
அவமதிப்பு
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், வளர்மதி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், வேலுமணி, தமிழ்மகன் உசேன் போன்றோர் பேசுகையில் பன்னீர்செல்வத்தின் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்த்தனர். பொதுக்குழு உறுப்பினர்களும், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஓபிஎஸ்ஸுக்கு அச்சுறுத்தல்
அப்போது அவரை சூழ்ந்த தொண்டர்கள் சிலர் ஓபிஎஸ் மீது தீர்மான நகல்களை வீசி எறிந்ததாகவும், தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும், கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் வருகை தந்த வாகனத்தை சிலர் பஞ்சர் ஆக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அச்சுறுத்தல் நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆதரவு வாபஸ்
இந்நிலையில், தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன், பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரை அவமதித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினரைக் கண்டித்து, அவர்களுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.
பரபரப்பு போஸ்டர்
அந்த போஸ்டரில், அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான எனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் ஆகியோரை அவமதிப்பு செய்த எடப்பாடி அணியினரைக் கண்டித்து அவர்களுக்கு நான் அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறேன் என்று சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன். இந்த போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி தரப்பு அதிர்ச்சி
எடப்பாடி பழனிசாமிக்கு 69 மாவட்ட செயலாளர்கள் ஆதரவும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. வைத்திலிங்கம் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓ.பி.எஸ் பக்கம் நிற்கின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த பொதுக்குழு யுத்தத்தால், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை ஒன்றிய செயலாளர் ஒருவர் வாபஸ் பெற்றுள்ளது எடப்பாடி பழனிசாமி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.