தஞ்சையில் பள்ளிகளில் வேகமாக பரவி வரும் கொரோனா.. அச்சத்தில் மக்கள்!
தஞ்சை: தஞ்சையில் உள்ள பள்ளிகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முதலில் ஒரு பள்ளி அடுத்தாக ஒரு பள்ளி என அடுத்தடுத்து பரவி இருப்பது பொதுமக்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து இயல்புநிலை திரும்பி வந்தது. கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களாக நிலைமை நன்றாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிகத்தில் கொரோனா பரவல் என்பது தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் மெதுவாக அதிகரித்து வருகிறது.
ஒரே பள்ளியில் பலருக்கு
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதித்ததில் 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டை
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதேபோல் மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது அச்சத்தை அதிகரித்துள்ளது.
தனியார் பள்ளிகள்
அண்மையில் தஞ்சையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவி ஆகியோருக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அச்சம்
.இதனால் தஞ்சையில் பள்ளிகளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 142 பேரில் 66 பேர் குணமடைந்து விட்டனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 76 பேர் கொரோனாவுக்க சிகிச்சை பெற்று வருகிறார்கள் தஞ்சையை தாண்டி திருச்சியிலும் பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.