தேனியில் உள்ள பிரபல பொதுத்துறை வங்கியில்.. தங்க நகை அடகு வைத்த ஆசிரியை.. நடந்த பெரிய ட்விஸ்ட்
தேனி: தேனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கோமதி என்பவர் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய தங்க நகைகளை தேசிய வங்கி ஒன்றில் அடகு வைத்து கடன் பெற்றார். பின்னர் நகைக்கடனை செலுத்திவிட்டு நகைகளை திரும்பக் கேட்டார். ஆனால் நகைகளை வங்கி கொடுக்கவில்லை..இதையடுத்து அவர் தொடர்ந்த வழக்கில் அடகு வைத்த நகைக்குரிய தொகையை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்று வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நகையை அடகு வைத்து கடன் பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகள் பல உள்ளன. நகையை அடகு வைத்த வங்கியில், வேலை செய்யும் ஊழியர்கள் உங்கள் பெயரில் உள்ள நகையை எடுத்து மோசடி செய்தால், அதில் நீங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் அபூர்வமாக இப்படி நடைபெறக்கூடும். காசாளர்கள் ஒரு சிலர், வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு பதில் போலி நகைகளை உள்ளே வைத்து மோசடி செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் சில வங்கிகளில் சரியான தகவல்களை கூற மாட்டார்கள். ஓராண்டு முடிந்து திருப்பாமல் விட்டால் மாதம் மாதம் ஆட்டோ ரெனிவலுக்காக வங்கியில் உள்ள பணத்தை போட்ட உடன் எடுத்துக் கொள்வார்கள். இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளது. வங்கியில் நகையை அடகு வைப்பவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். தேனியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்..

தேனியை சேர்ந்த 85 வயதாகும் கோமதி தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார், அவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது 26 பவுன் நகைகளை தேனி மதுரை சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியில் அடகு வைத்து நகைக்கடன் பெற்றுள்ளார். பின்னர் நகைக்கடனை செலுத்திவிட்டு நகைகளை திரும்பக் கேட்டிருக்கிறார்.
ஆனால் அந்த சமயத்தில் வங்கியில் வாடிக்கையாளர்கள் பலரின் நகைகள், வேறு பெயர்களில் அடகு வைத்து மோசடி செய்யப்பட்டிருந்தது. அதுகுறித்த பிரச்சினையும் அப்போது நடந்து கொண்டு இருந்தது. இதனால் அவருடைய நகைகளை வங்கி நிர்வாகம் திருப்பிக் கொடுக்கவில்லை.. பலமுறை கேட்டும் வங்கி நிர்வாகம் நகைகளை கொடுக்க மறுத்து விட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியை கோமதி, தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வக்கீல் திருமலைவெங்கடேசன் என்பவர் மூலம் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த மனு, நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் சுந்தர், உறுப்பினர் சவுந்திரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டது. மனு மீதான விசாரணை முடிவில், ஓய்வு பெற்ற ஆசிரியை கோமதிக்கு, தேனியில் உள்ள குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி 26 பவுன் தங்க நகைகளுக்கு 2017-ம் ஆண்டு மே 15-ந்தேதி நிலவரப்படியிலான விலை மதிப்பை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும். சேவை குறைபாட்டுக்கு ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது..












Click it and Unblock the Notifications