பாண்டியன் எக்ஸ்பிரஸ்: இனி சென்னை டூ மதுரை அல்ல.. சென்னை டூ போடி - இது ஓ.பி.ரவீந்திரநாத்தின் கோரிக்கை
தேனி: சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தேனி மாவட்டம் போடி வரை இயக்க வலியுறுத்துவேன் என அதிமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தேக்கம்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுகவை சேர்ந்த தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நிழற்குடையை திறந்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை - போடி மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கி தற்போது மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் முடிவடைந்து உள்ளன. கடந்த மாதம் மதுரை தேனி வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது மத்திய அரசு அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.
ரயில்வேதுறை பொதுமேலாளரிடம் இது குறித்து நான் பேசினேன். இன்னும் ஓரிருநாட்களில் ரயில்வே அமைச்சரை தொடர்புகொண்டு பேசுவேன். விரைவில் நடைபெற உள்ள ரயில் சேவை தொடக்க விழாவில் மதுரை அல்லது தேனியில் ரயில்வே அமைச்சர் கலந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை வைப்பேன். ஒரு மாத காலத்தில் ரயில்சேவை துவங்கும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நான் ரயில்வே அமைச்சரிடம் 7 கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். அதில் மதுரை போடி ரயில் சேவை கோரிக்கை முக்கியமானது. மதுரையில் இருந்து போடி வரையிலான ரயில் சேவை மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை இயக்க வேண்டும் என வலியுறுத்துவேன்.
ரயில் சோதனை ஓட்டத்தின் போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து மாநில அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரயில் தண்டவாளம் மாதிரி... ஈகோ வேணாமே! முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அன்புமணி அட்வைஸ்