"நம் வழி தனி வழி" ஓபிஎஸ் ஊரில் கால்பதித்த எடப்பாடி பழனிசாமி.. திரண்டு வந்து வரவேற்ற தொண்டர்கள்!
தேனி: ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து உருவாக்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின், முதல்முறையாக தேனி மாவட்டம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நம்முடைய வழி தனி வழியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு, அதிமுகவில் நடந்து ஒற்றைத் தலைமை விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தொண்டர்களுக்கு தனது வலிமையை நிரூபிக்கும் வகையில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
இரட்டை இலை எங்களுக்கே.. தேர்தல் ஆணைய கதவை தட்டும் எடப்பாடி.. அதிரடி பாதை.. ஆஹா.. இவ்வளவு வேகமா!
தேனி வந்த இபிஎஸ்
தேனி மாவட்டம் கம்பத்தில், கட்சி நிர்வாகிகளான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்ல திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தேனிக்கு கார் மூலம் இன்று வந்தார். அதற்காக மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்டிகே ஜக்கையா தலைமையில் மிகப்பிரமாண்டமாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு, சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
உற்சாக வரவேற்பு
திண்டுக்கல்- வத்தலகுண்டு வழியாக தேனி புறவழிச்சாலையில் எடப்பாடி வந்த போது அவரை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். அதிமுகவின் தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதனையடுத்து தேனி அன்னஞ்சி விளக்கு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கூடி பூரண கும்பம் மரியாதை உடன் மலர்கள் தூவியும், செண்டைமேளம், தப்பாட்டம், டிரம் செட், கரகாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவற்றை முழங்கச் செய்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி பேச்சு
இதனையடுத்து கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமணத்தை நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வால் கொடுத்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எனக்கு தேனி மாவட்டத்தில் மிகவும் சிறப்பான, எழுச்சியான உற்சாகமாக வரவேற்பளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.
தனி வழி
குறிப்பாக ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அவர்கள் கனவை மெய்ப்பிக்க வேண்டும். நம்முடைய வழி தனி வழியாக இருக்க வேண்டும். நேர்மையான வழியாக இருக்க வேண்டும். அந்த இருபெரும் தலைவர்களின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.