போடி தொகுதியில் களமிறங்க ஆர்வம் காட்டும் அதிமுகக்காரர்கள்.. மீண்டும் ராமநாதபுரம் செல்லும் ஓபிஎஸ்?
தேனி: முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடிநாயக்கனூரில் அதிமுக சார்பாக போட்டியிட ஓபிஎஸ் தரப்பால் வளர்த்துவிடப்பட்டவர்கள் தீவிரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. போடி சட்டமன்றத் தொகுதி என்னதான் ஓபிஎஸ் தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், இரட்டை இலையின் செல்வாக்கு அதிகம் என்பதால், ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்களும் கூட எடப்பாடி பழனிசாமியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, தென் மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. எந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும், இரட்டை இலை சின்னத்திற்கு தனி செல்வாக்கு இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் தென் மாவட்டங்களில் அதிமுக தனது பிடியை தளர்த்திவிட்டது. இதனை பயன்படுத்தி திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக போடி சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்து வருகிறார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வென்ற ஓபிஎஸ், இம்முறை போடி தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின், கட்சியைக் கைப்பற்றுவதிலேயே ஓபிஎஸ் தீவிரமாக இருந்தார்.
அதேபோல் பாஜக உடன் நெருக்கம் காட்டி வந்தாலும், தற்போது என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், போடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலரும் காய்களை நகர்த்தி வருகின்றனர். அதில் பலரும் ஓபிஎஸ் தரப்பால் வளர்த்துவிடப்பட்டவர்கள்.
தேனி மாவட்ட அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைத்த பலரும், இன்று அவரை எதிர்க்க தயாராகி வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நாராயணசாமி போடி தொகுதியில் களமிறங்க ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் முன்னாள் எம்பி பார்த்திபன், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன் தயாராகி வருகின்றனர்.
இது இப்படியிருக்க ஓபிஎஸ் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலின் போதே தேனியில் போட்டியிடாமல் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம் இருந்த ராமநாதபுரம் தொகுதியில் தான் ஓபிஎஸ் போட்டியிட்டார். இதனால் சட்டசபைத் தேர்தலின் போதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை போடி தொகுதியில் போட்டியிட வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட்டு அப்பாவு, தாமரைக்னி உள்ளிட்டோர் வென்றிருக்கின்றனர். அதுபோல் ஓபிஎஸ் தனது செல்வாக்கை இம்முறை நிரூபித்துக் காட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications