என்ன நடக்குது பெரியகுளத்தில்....வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த வேட்பாளர்
தேனி: பெரியகுளம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் இன்னும் சென்னையில் இருந்து தொகுதிக்கே வரவில்லை என்று கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியால் அதிமுக தலைமை வேட்பாளரை மாற்றப்போவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி மாவட்டம் பெரியகுளம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் ஆகும். தனி தொகுதியான பெரியகுளம் தொகுதிக்குள் தான் தேனி நகராட்சியும் வருகிறது. இங்கு வேட்பாளராக முருகன் என்பவர் போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவித்தது. இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சமூக நல அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்கள் உள்பட குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரியகுளம் கல்லுப்பட்டி ஆகும். அமைச்சர் விஜய பாஸ்கரின் பரிந்துரையில் சீட் வாங்கியதாக கூறப்படுகிறது.
இறந்தது குப்பனோ, சுப்பனோ இல்லை.. ஜெயலலிதா.. இதை விசாரிக்காமல் விடமாட்டேன்.. ஸ்டாலின் சபதம்!
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வசிக்காத, கட்சிக்காக பெரிதாக உழைக்காத புதுமுகத்துக்கு சீட் கொடுத்திருப்பது அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி ரத்தினம் நகரில் நடந்தது.
இதில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் நவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டனர். பெரியகுளம் தொகுதி வேட்பாளர் முருகன் வராமல் புறக்கணித்தார். இதனால் அவர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பெரியகுளம் தொகுதிக்கு புது வேட்பாளராக பெரியகுளத்தை சேர்ந்த கொட்டகை போடும் மயில் என்பவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.