தேனியில் ஆச்சரியம்.. சதீஷ் வீட்டில் இரவில் திரண்ட ஜனம்.. சர்ப்ரைஸ் தந்த பிரம்ம கமலம்! வாவ் நிஷாகந்தி
தேனி: பிரம்ம கமலம் பூவின் அறிவியல் பெயர் சாஸ்சுரியா ஒப்வல்லட்டா என்பதாகும்.. இரவில் பூத்து காலையில் உதிரும் இந்த அதிசய பூக்களின் முக்கியத்துவமும், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா? பிரம்ம கமலம் என்று பெயர் வருவதற்கு என்ன காரணம்? இரவில் பூக்கும்போது, இந்த பூவை என்ன செய்ய வேண்டும்? தேனியில் சதீஷ் வீட்டில் என்ன ஆச்சரியம் நடந்தது? சுருக்கமாக பார்ப்போம்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது 'நிஷாகந்தி' எனப்படும் 'பிரம்ம கமலம்' பூவாகும்.. இது சிவபெருமானுக்கு விருப்பமான மலராக கருதப்படுகிறது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூவானது இரவில் பூத்து அதிகாலையில் வாடிவிடும் தன்மை கொண்டது

பிரம்ம கமலத்தின் சிறப்புகள்
பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. இந்தப் பூவின் உட்புறத்தில் பல நாகங்கள் உள்ளது போல தென்படுமாம்.. அதேபோல இந்த அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போல தெரியுமாம்.. அதனால்தான் இதற்கு பிரம்ம கமலம் என்றே பெயர் வந்தது.. பிரம்மனின் நாடிக்கொடி எனவும் இது வர்ணிக்கப்படுகிறது.
கமலம் அழகான மலராக மட்டுமில்லாமல், ஆன்மிகம் மற்றும் தூய்மையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூ இலையில் இருந்தே பூ பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும்போது, அதனை பார்ப்போருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது பெரியவர்களின் நம்பிக்கையாகும். அதுமட்டுமல்ல, பிரம்மகமலம் என்பது பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக வழிபாடு
இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கக்கூடியது பிரம்ம கமலம் பூக்கள்.. நள்ளிரவில் பூத்து அதிகாலையில் வாடிவிட்டாலும், இந்தப் பூவின் வாசம் அதைசுற்றியுள்ள பகுதியை நறுமணத்துடன் வைத்திருக்கும். இவை ஒருவகை கள்ளி வகையை சேர்ந்தது என்கிறார்கள்.. சிலசமயம், ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். அப்படி மலர்ந்ததுமே இந்த பூக்களை பறித்து உடனே கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வழிபடுவார்கள்.
சில மலைக்கிராமங்களில், இந்த பிரம்ம கமலம் பூக்கும்போது நடனமாடி, பாட்டு பாடி ரசித்து வரவேற்பார்களாம்.. திருவிழாக்களின் போதும், மலைக் கோயில்களில் பிரசாதமாகவும் இந்த பூக்கள் பயன்படுத்தப்படுகிறதாம்.. இதனால் மன அமைதி கிடைப்பதுடன், மனமும், ஆன்மாவும் தூய்மையாகிறது.. எதிர்மறை ஆற்றல் அல்லது தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.
மலரின் சிறப்புகள்
இந்த மலரின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.. இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்த பூ உத்ரகாண்ட், இமயமலை அடிவாரங்களில் அதிகமாக பூத்துக்குலுங்கும்.
பெரும்பாலும் கேதார்நாத் துங்கநாத் பத்ரிநாத் போன்ற சிவாலயங்களில் சிவனுக்கு மிகவும் உகந்த பூக்களாக இது கருதப்படுகிறது. ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.
தேனியில் ஆச்சரியம்
அந்த வகையில், தேனி மாவட்டம் அல்லிநகரம் பாண்டி முனி கோயில் அருகே உள்ள சதீஷ் என்பவர் வீட்டில் வருடத்துக்கு ஒருமுறை பூகுகும் பிரம்ம கமலம் செடியில் பூக்கள் மலர்ந்துள்ளன.. இந்த கோடை காலத்திலும் தற்போது பிரம்ம கமலம் மலர்ந்துள்ளது தேனி மக்களை ஆச்சரியத்தில ஆழ்த்தி வருகிறது.. இப்படித்தான் கடந்த 3 மாதங்களுக்கு முன்புகூட இதே செடியில் பூக்கள் மலர்ந்திருந்தன. இப்போது சதீஷ் வீட்டுக்கு திரண்டு செல்லும் தேனி சுற்றுவட்டார மக்கள், பிரம்ம கமலத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications