சிறுத்தை இறப்பு விவகாரம்.. மக்களவை சபாநாயகருக்கு கடிதம்.. கைதாகிறாரா ஓபிஎஸ் மகன்? குஷியில் "தங்கம்"
தேனி: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு மாவட்ட வன அலுவலர் கடிதம் எழுதி இருப்பதாக தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் , பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியின் அருகே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இங்கு பாதுகாப்பிற்காக சோலார் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கிய சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை அடித்து உதைத்து கைது செய்தனர்.

தோட்ட மேலாளர்கள்
மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தின் மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தோட்டத்தில் மின்வேலி அமைத்தது உரிமையாளர் சொல்லாமல் அமைத்திருக்க மாட்டார்கள். எனவே சிறுத்தை உயிரிழக்க காரணமாக இருந்தது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தான்.

ஆடு மாடு மேய்த்தவர்கள் மீது நடவடிக்கை
ஆனால் அவரை கைது செய்யாமல் தோட்டத்தில் ஆடு மாடு மேய்த்தவர்களையும் மேலாளர்களையும் கைது செய்தது எந்த வகையில் நியாயம் என கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரவீந்திரநாத் கைதாவாரா
ரவீந்திரநாத்தை கைது செய்வதற்கு முடியாமல் அப்பாவிகள் கைது செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில்தான் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன், திமுக பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்டோர் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ரவீந்திரநாத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட வன அலுவலருக்கு நேரில் சென்று புகார் அளித்தனர்.

நெருக்கடி
இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஓபி ரவீந்திரநாத்தும் தங்க தமிழ்ச் செல்வனும் எதிரும் புதிருமாக இருப்பவர்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தங்கதமிழ் செல்வன் தீவிரம் காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து தங்கதமிழ்ச் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கதமிழ் செல்வன் கூறுகையில் தோட்டத்தில் சிறுத்தை இறந்ததற்கு ரவீந்திரநாத் கைது செய்யப்படுவாரா? இல்லை மத்திய அரசு குறுக்கிட்டு காப்பாற்றப்படுவாரா?

சிறுத்தை இறப்பு
ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை இறந்ததற்கு தோட்டத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்துள்ளோம், தேனி மாவட்ட வன அலுவலர் எங்களின் கோரிக்கையை ஏற்று ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே மக்களவை சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications