தேனி மாவட்டத்தில் 3 திமுக நகரச் செயலாளர்கள் நீக்கம்! அதிர்ச்சியிலும் ஆதங்கத்திலும் உடன்பிறப்புகள்!
தேனி: தேனி மாவட்டத்தில் 3 திமுக நகரச் செயலாளர்களை கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை அதிரடி காட்டியுள்ளது.
தேனி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர திமுக பொறுப்பாளர் முரளி, போடி நகர திமுக செயலாளர் செல்வராஜ், ஆகிய மூவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
இந்த மூவர் மீதான நடவடிக்கையின் பின்னணியில் காங்கிரஸ் அளித்த புகாரே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தற்காலிக நீக்கம்
''நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் -துணைத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும், கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் செயல்பட்ட தேனி வடக்கு மாவட்டம் தேனி நகரக் கழகப் பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகரக் கழக பொறுப்பாளர் முரளி, போடி நகர கழகச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.'' இவ்வாறு துரைமுருகன் கூறியிருக்கிறார்.

தேனி மாவட்டம்
தேனி நகராட்சியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியிருந்த நிலையில் அங்கு திமுக நகரப் பொறுப்பாளர் பாலமுருகனின் மனைவி ரேனு பாலமுருகன் போட்டி வேட்பாளராக மறைமுகத் தேர்தலில் களமிறங்கி இன்று தேனி நகராட்சி சேர்மனாக இருக்கிறார். அவரை பதவி விலக கோரி கட்சி தலைமை அறிவுறுத்தியும் பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை. இதனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் இது தொடர்பாக கே.எஸ்.அழகிரிக்கு கொடுத்த குடைச்சலால் அவரும் இதனை அண்ணா அறிவாலயம் கவனத்துக்கு எடுத்துச்சென்றிருக்கிறார்.

அதிர்ச்சி -ஆதங்கம்
இதையடுத்து வேறு வழியின்றி தேனி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரை எதிர்த்து அரசியல் செய்து வந்த பெரியகுளம் திமுக நகரப் பொறுப்பாளர் முரளியும், ஓ.பி.எஸ்.ஸின் சொந்த தொகுதியான போடியில் திமுக நகரச் செயலாளராக இருந்த செல்வராஜ் என்பவரும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது தேனி மாவட்ட உடன்பிறப்புகளை அதிர்ச்சியும், ஆதங்கமும் பட வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்காக
காங்கிரஸ் கட்சிக்காக சொந்தக் கட்சியின் நிர்வாகிகளை அதுவும் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து அவரது சொந்த ஊரிலேயே அரசியல் செய்து திமுகவை வளர்ச்சி அடைய வைத்தவர்களுக்கு தலைமை அளிக்கும் பரிசு இது தானா என நீக்கப்பட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் ஆதங்கத்தை கொட்டத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications