"காவல் நாயாக இருந்துள்ளோம்.. டிடிவி தினகரனை பார்த்து பயந்ததும் உண்மை தான்.." ஆர்பி உதயகுமார் பரபர
தேனி: டிடிவி தினகரனை பார்த்து ஒரு காலத்தில் பயந்தது உண்மை தான் என்றாலும் இப்போது அவரை கண்டு புழுவும் பயக்காது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் தமிழ்நாட்டில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இந்த முறை தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் எனப் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஆர் பி உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.
ஆர் பி உதயகுமார்: அப்போது அவர் பேசிய பேச்சுகள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஆர் பி உதயகுமார் பேசுகையில், "கடந்த 15 ஆண்டுகளாகத் தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் தான் டிடிவி தினகரன். ஜெயலலிதா அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தார். கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டவர்.. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தான் அவர் தமிழ்நாட்டில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர் கே தொகுதியில் 20 ரூபாய் நோட்டு காட்டி ஏமாற்றியவர். அதன் பிறகும் அந்த தொகுதி பக்கமே போகவில்லை.
இதனால் மீண்டும் அங்கு நிற்க முடியாமல் கடந்த தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் நின்றார். இருப்பினும், மக்கள் அவரை நம்பாமல் நிராகரித்தனர். இப்போது கடைசி புகலிடமாகத் தேனி லோக்சபா தொகுதிக்கு வந்துள்ளார். இங்கேயும் அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் அவர் தான் வீராப்பாக வருகிறார். இந்த வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது.
பயந்தது உண்மை தான்: நேற்று கூட என்னைப் பபூன் என்று விமர்சித்துள்ளார். நான் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். நான் பபூன் தான். இந்த பபூனால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது. ஆனால், அவர் வீரப்பா.. அந்த வில்லனால் அனைவருக்கும் தீமை தான். கிளைமேக்ஸில் வெல்ல போவது நாங்கள் தான். அவர் நிச்சயம் சிறைக்குத் தான் போகப் போகிறார்.
ஜெயலலிதா இருந்த வரை நாங்கள் உங்களைப் பார்த்துப் பயந்தது உண்மை தான். ஆனால், இப்போதெல்லாம் நீங்கள் காட்டும் பூச்சாண்டிக்குப் புழு கூட பயப்படாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் இப்போது தான் சுதந்திர காற்றைச் சுவாசிக்கிறோம். உங்களிடம் இருந்து இந்த இயக்கம் விடுதலை பெற்று இருக்கிறது. எடப்பாடி தலைமையில் சுதந்திரமாக இருக்கிறோம்.
காவல் நாய்: ஜெயலலிதா இருந்த வரை உங்கள் வீட்டிற்குக் காவல் நாயாக இருந்துள்ளோம். ஆனால், இப்போது சீண்டினால் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுப்போம். எடப்பாடி பற்றியும் அவர் அவதூறாகப் பேசியுள்ளார். வாய் சவடாலை எல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. கோவில்பட்டி என்ற ஒரு தொகுதியிலேயே அவரை ஓட ஓட விரட்டினார்கள். தேனியிலும் அவர் படுதோல்வி அடையப் போவது உறுதி. அந்த விரக்தியில் தான் அவர் இப்படிப் பேசி வருகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications