ஆறுதல் சொல்ல வந்த இடத்தில் எதுக்கு இந்த அக்கப்போர் பஞ்சாயத்து? ஈபிஎஸ் அணியிடம் கடுகடுத்த ஓபிஎஸ்
தேனி: தமது சகோதரர் மறைவுக்கு ஆறுதல் சொல்ல வந்த இடத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனையை பேசிய ஈபிஎஸ் அணியினரிடம் ஓபிஎஸ் பகிரங்கமாக அதிருப்தி முகத்தை காட்டிவிட்டதுதான் இப்போது அதிமுகவில் ஹாட் டாபிக்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதில் சற்றும் விருப்பமே இல்லாத ஓ. பன்னீர்செல்வம் தமக்கான பாதையை அப்போதே தனியே தொடங்கிவிட்டார். சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றது போதும்.
இப்போது அதிமுக யார் கட்டுப்பாட்டின் கீழ் வரப்போகிறது என்கிற அதிகார யுத்தம்தான் அனலடிக்கிறது. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? என்பதில் பஞ்சாயத்து தொடங்கியது. முதல்வர் வேட்பாளராக வெல்ல முடியாத ஈபிஎஸ்-க்கு எதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி என எகிறியது ஓபிஎஸ் அணி.

அதிருப்தியில் ஓபிஎஸ்
ஆனால் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் பலம் இருந்த காரணத்தாலேயே எடப்பாடியால் எளிதாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே என பிரகடனம் செய்து கொள்ள முடிந்தது. இதில் மிக மிக கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறார் ஓபிஎஸ். இதனால் இதுவரை இல்லாத வகையில் அதிமுக லெட்டர் பேடு இல்லாமலேயே அறிக்கைகளை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வெளியிட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ்- தங்க தமிழ்ச்செல்வன்
இந்த நிலையில் ஓபிஎஸ்-ன் சகோதரர் உடல்நலக் குறைவால் மறைந்தார். தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்-ன் பரம எதிரியாக இருக்கும் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் ஓபிஎஸ் வீட்டுக்கு படையெடுத்து சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஓபிஎஸ், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் நீண்டநேரம் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஈபிஎஸ் அணி தேனி விசிட்
திமுக ஆட்சி அமைந்தது முதலே ஒருவித இணக்கத்துடன் இருக்கிறார் ஓபிஎஸ் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில்தான் ஈபிஎஸ் ஆதரவு அணியின் சீனியர்கள் பட்டாளம் திடீரென ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றது. ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூற சென்ற ஈபிஎஸ் அணி மெல்ல கட்சி பிரச்சனையை பேச தொடங்கி இருக்கிறது.

முகம் சுளித்த ஓபிஎஸ்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை அண்ணன் நீங்க ஏற்றுதான் ஆக வேண்டும்.. என நெருக்கடி கொடுத்திருக்கிறது ஈபிஎஸ் அணி. ஏற்கனவே எதிர்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடிக்கு தூக்கி கொடுத்தவர்கள் என்பதால் அந்த அணி மீது செம காட்டத்தில் இருந்த ஓபிஎஸ், ஒருகட்டத்தில் முகத்தை சுளிக்க தொடங்கிவிட்டாராம்.

கடுகடுத்த ஓபிஎஸ்
ஆனாலும் மனம் தளராத ஈபிஎஸ் அணி தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறது. அதனால் கடுப்பாகிப் போன ஓபிஎஸ், இங்க எதுக்கு வந்தீங்க? இதை பற்றி பேசத்தான் என சொல்லி இருந்தால் அப்புறம் பார்த்துக்கலாம் என சொல்லி இருப்பேனே என கடுகடுப்புடன் பொரிந்துவிட்டாராம்.

ஈபிஎஸ் அணி குமுறல்
இதனால் ஈபிஎஸ் அணியினர் வேறுவழியே இல்லாமல் திரும்பிவிட்டனராம். எதிரி கட்சியான திமுகவினர் வந்த போது சகஜமாக பேச முடிகிறது.. ஆனால் சொந்த கட்சியின் சீனியர்கள் நாங்கள் வந்து பேசுறதையே எரிச்சலுடன் பார்த்தால் எப்படி? என குமுறுகின்றனராம் ஈபிஎஸ் அணியினர்.












Click it and Unblock the Notifications