என்னை நீக்க இவங்க 2 பேரு யாரு?.. கட்சியையே நாசம் பண்ணிட்டாங்க.. பெரியகுளத்தில் பொங்கிய ஓ ராஜா
பெரியகுளம்: அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சசிகலாவை திருச்செந்தூரில் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா சந்தித்து பேசினார். அப்போது அவர் அதிமுகவை தலைமையேற்க வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
இத்தனை நாட்களாக சசிகலாவை சந்தித்தாலோ பேசினாலோ சசிகலாவுக்கு ஆதரவாக பேசினாலோ அவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கி வந்த ஓபிஎஸ்ஸும்- இபிஎஸ்ஸும் ஓ ராஜா விஷயத்தில் எந்த மாதிரியான முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.

ஓ ராஜாவை நீக்க இபிஎஸ் முடிவு?
ஓ ராஜாவை நீக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்திருந்தால் அதற்கு ஓபிஎஸ் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஓ ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக அறிவித்தது. சகோதரனை அதிமுகவிலிருந்து நீக்கும் அறிவிப்பில் அண்ணன் ஓபிஎஸ்ஸே கையெழுத்திட்டுள்ளார்.

சசிகலா தலைமையேற்று நடத்த கோரிக்கை
இதுகுறித்து பெரியகுளத்தில் ஓ ராஜா கூறுகையில் அதிமுகவை சசிகலா தலைமையேற்று நடத்த வேண்டும். நான் என் விருப்பத்தின் பேரில்தான் சசிகலாவை சந்தித்தேன். இதுகுறித்து அண்ணனிடம் தெரிவிக்கவில்லை. என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நான் என்ன முதல்வர் ஸ்டாலினையா சந்தித்தேன்?

சசிகலாதான் பொதுச் செயலாளர்
எனக்கு பொதுச் செயலாளர் சசிகலாதான். அவரை போய் சந்தித்தில் என்ன தவறு உள்ளது? நகர்ப்புற தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ்தான் காரணம். 4 தேர்தல்களை சந்தித்தார்கள், இதில் ஏதாவது கட்சியில் வளர்ச்சி இருந்ததா? ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் சேர்ந்து கட்சியையே நாசம் செய்துவிட்டார்கள். என்னை நீக்க இவர்கள் இருவரும் யார்? அதிமுகவுக்கு பொதுச் செயலாளர் சசிகலாதானே என ஓ ராஜா அதிரடியாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ்ஸு்ம ஈபிஎஸ்ஸும்தான் காரணம், அதனால் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தேனி மாவட்ட அதிமுக
தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலா தலைமையேற்க அழைத்து வருகிறார்கள். அதற்கான தீர்மானத்தையும் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். இதில் ஓ ராஜா வேறு சசிகலாவை நேற்றைய தினம் சந்தித்ததால் இதில் ஓபிஎஸ் சொல்லி அவர் சென்றிருப்பாரோ என்ற யூகங்கள் எல்லாம் ரெக்கை கட்டி பறந்தன. ஆனால் அவையெல்லாம் தவறு என்பதை இன்று வெளியான அறிக்கை தெரிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications