ஓபிஎஸ் கோட்டைக்குள்ளேயே கால்பதித்த "சசிகலா.." பரபரக்கும் தேனி.. போஸ்டர் பாலிடிக்ஸ்!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்திருந்த சசிகலா சமீப காலமாக அதிமுக பிரமுகர்கள் சிலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
அந்த ஆடியோ பொது வெளியில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் எத்தனை பேரிடம் பேசினாலும் கவலை கிடையாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை போஸ்டர்கள்
இந்த நிலையில் மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் சசிகலா அதிமுகவை தலைமை தாங்க வர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இது சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்படுகிறதா, அல்லது அதிமுகவுக்கு உள்ளே இருக்கக்கூடிய சில அதிருப்தியாளர்கள் இந்த வேலையை செய்கிறார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறது கட்சித் தலைமை.

ஓபிஎஸ் கோட்டைக்குள்
இந்த நிலையில் தான் பன்னீர்செல்வம் தொகுதிக்கு உள்ளேயே சசிகலாவை வரவேண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனுர் பகுதியில் இப்படி போஸ்டர்கள் உள்ளன. அஇஅதிமுக வின் சார்பாக கழகத்தை வழிநடத்த வருகை தரும் சின்னம்மாவை வரவேற்பதாக ஒட்டப்பட்டுள்ளன அந்த போஸ்டர்கள்.

பரபரப்பு போஸ்டர்
அஇஅதிமுக ஒருங்கினைப்பாளர் ஒ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மட்டுமல்லாது சட்டமன்ற உறுப்பினராக உள்ள போடிநாயக்கனூரிலும் சின்னமா எனக் குறிப்பிட்டு அதிமுகவுக்கு சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அஇஅதிமுக நிர்வாகிகள் மத்தியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சு வார்த்தைகள்
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள, ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இது சம்மந்தமாக தற்போது லோக்கல் சசிகலா ஆதரவு பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications