விரைவில் ஜெயிலுக்கு போவார்.. "எடப்பாடி பழனிசாமி அன்ட் கோ"வின் ஊழல்.. புத்தகமே ரெடி.. புகழேந்தி
தேனி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்களும் செய்த ஊழல் குறித்து புத்தகம் ஒன்றை போட்டுள்ளேன் என புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹர தெருவில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்திற்கு புகழேந்தி வருகை தந்தார். அங்கு ஓபிஎஸ்ஸின் மனைவி விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களை புகழேந்தி சந்தித்தார். அவர் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் பற்றி தெரியாமல் அரசியல் நடத்தி வருகிறார். பணம் இருந்தால் போதும் நீங்கள் மன்னனாகலாம் என்று உடன் இருப்பவர்கள் கூறியதால் அவர் மகிழ்ந்தார். சர்க்கஸ் ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். ஜெயலலிதா இருந்த போதும் ஆண்டுக்கு ஒரு முறைதான் பொதுக் குழு கூட்டம் நடக்கும். ஆனால் இப்பொழுது வாரம் ஒரு முறை பொதுக்குழு கூட்டுகிறார்கள்.
3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான்
பொன்னையன்
பொன்னையன் தெள்ளத் தெளிவாக உண்மையை கூறியுள்ளார். அவர் வெகு விரைவில் எங்கள் பக்கம் வந்து விடுவார். ஜெயலலிதா இருந்த போது எடப்பாடி எங்கேயோ இருப்பார். அண்ணன் பன்னீர்செல்வத்தைதான் ஜெயலலிதா அருகில் அமர வைத்து பேசுவார். பழனிசாமி மிக விரைவில் ஜெயிலுக்கு போவார். அவரைப் பற்றி ஊழல் புத்தகம் எழுதி வைத்துள்ளேன்.
மிகப் பெரிய ஊழல்
இந்தியாவிலேயே மிக பெரிய ஊழல் என்றால் பழனிசாமி மற்றும் ஆதரவு அமைச்சர்கள் செய்ததுதான். கொடநாடு கொலை வழக்கை தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உடனே தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறையில் போட வேண்டியவர்கள் எல்லாம் வெளியில் நடமாட விட்டிருக்கிறீர்கள். எடப்பாடி பழனிசாமி இந்த கட்சிக்காக என்ன தியாகம் செய்தார்?
அதிமுக ஆட்சி
ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும். சொந்த தொகுதியில் தோற்று விட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். சசிகலா முதல்வராக வேண்டும் என முதலில் கூறியவரே முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.
கஷ்டம்
உதயகுமார் மற்றும் கே பி முனுசாமி ஆகிய இருவரும் கஷ்டம் வரும்போது மட்டுமே ஓ பன்னீர்செல்வத்தை நாடி வருவார்கள். எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஓராண்டு இருந்துள்ளார். தற்பொழுது வரை திமுக ஓராண்டு ஆட்சியில் எந்த ஒரு குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை என புகழேந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.