தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல்..காற்றாலைகளில் மின் உற்பத்தி உயர்வு
தேனி: தென்மேற்கு பருவக்காற்று தேனி மாவட்டத்தில் வீசத் தொடங்கியுள்ளதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு முன்னதாகவே காற்று வீச தொடங்கி உள்ளதால் ஒரு காற்றாலையின் ஒரு நாள் மின்சார உற்பத்தி 12 ஆயிரம் யூனிட் என்ற அளவில் உள்ளது.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கிவிடும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்ச கட்டத்தை எட்டும்.

ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. இதனால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காற்றாலை பணியாளர்கள் கூறுகையில், தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் என்ற அளவில் உள்ளது. நடப்பாண்டு முன்னதாகவே காற்று வீச தொடங்கி உள்ளதால் ஒரு காற்றாலையின் ஒரு நாள் மின்சார உற்பத்தி 12 ஆயிரம் யூனிட் என்ற அளவில் உள்ளது. இனிவரும் நாட்களில் காற்றின் வேகமும், மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்றனர். மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது.

பொதுவாகவே ஆடி மாதத்தில் அதிகமாக காற்று அடிக்கும். இப்போது வைகாசியிலேயே காற்று வீசத்தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. காற்றாலைகளில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications