ஓபிஎஸ் தம்பி வகித்து வந்த பதவி பறிப்பு.. தேனி ஆவின் நிர்வாக குழுவை முழுமையாக கலைத்து அரசு அதிரடி!
தேனி : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தலைவராக இருந்த தேனி ஆவின் நிர்வாகக் குழுவை முற்றிலுமாக கலைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.ராஜா ஆவின் நிர்வாகக் குழு தலைவராக இருந்தபோது தேனி ஆவினில் 38 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் கூட்டுறவு விதிமுறைகள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, ஆவின் நிர்வாகக் குழுவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்ட நிலையில், நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ளது.

தேனி ஆவின்
தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக் குழு தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. தேனி ஆவினுக்கு கடந்த 2019ல் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் தலைவராக ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வகித்து வந்தார். ஓ.ராஜா தலைவராக இருந்த ஆவின் குழுவில் தேனி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் இருந்து தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

நியமனத்தில் முறைகேடு
இந்தநிலையில் ஓ.ராஜாவின் பதவி காலத்தில் தேனி ஆவினில் துணை மேலாளர், டிரைவர், அலுவலக உதவி யாளர் உள்ளிட்ட 38 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த புதிய பணி நியமனத்தில் கூட்டுறவு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. மேலும் பணம் பெற்று பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து புதிதாக பணியில் சேர்ந்த 38 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

கூண்டோடு கலைப்பு
இந்நிலையில் தேனி ஆவின் நிர்வாக சீர்கேடு புகார் தொடர்பாக தேனி ஆவின் நிர்வாகக்குழு தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் கூட்டுறவு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தேனி ஆவின் நிர்வாக குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். ஆவின் செயல் ஆட்சியராக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் தம்பி பதவி பறிப்பு
ஓ.ராஜாவை தலைவராக கொண்ட தேனி மாவட்ட ஆவின் நிர்வாக குழுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2023 வரை உள்ள நிலையில், குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 17 இயக்குனர்கள் மற்றும் 420 பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. ஓபிஎஸ், அரசியல் ரீதியாக கடும் சறுக்கலைச் சந்தித்து வரும் நிலையில், அவரது தம்பியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து
ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பல்வேறு புகார்கள் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு சசிகலாவை சென்று ஓ.ராஜா சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸால் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications