இது விஜய்க்கே தெரியாது.. புஸ்ஸி ஆனந்த் டு லெப்ட் பாண்டி.. தவெக மகளிரணி நிர்வாகி பகீர் குமுறல்
தேனி: நடிகர் விஜயின் தவெகவில் மாவட்ட அளவிலான பதவிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. யார் யாருக்கு எங்கு பதவி ஒதுக்கியுள்ளனர் என்பதே தெரியவில்லை. அதற்குள் பஞ்சாயத்து வெடிக்க தொடங்கியுள்ளது. தேனி மகளிரணி நிர்வாகி சத்யா, மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தொடங்கி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரை பரபரப்பு புகார்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தேனி தவெக மகளிரணி நிர்வாகி சத்யா நந்தகுமார் என் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் கடந்த ஏழு ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கிறேன். தவெக ஆரம்பிக்கப்பட்ட பிறகு கட்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். சமீபத்தில் தேனி மாவட்ட நிர்வாகிகள், என் மீது வழக்கு இருப்பதால் பதவி கொடுக்க கூடாது என ஆனந்த் சாரே சொல்லிவிட்டார் என்றனர். தேனி மாவட்ட செயலாளர்களாக உள்ள லெப்ட் பாண்டி, பிரகாஷ் உறவினர்கள். இவர்களுக்கு அஜிதா தேவேந்திரன் என்ற பெண் உறவினர் ஆவார். அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

அஜிதா நேரடியாக ஆனந்த் சாரிடம், சத்யா மீது நிறைய வழக்குகள் உள்ளது. அவருக்கு மகளிரணி பதவி கொடுக்க வேண்டாம். எனக்கு கொடுங்கள் என்று சொல்லியுள்ளார். தவெக வழக்கறிஞர் அணி சக்தி, என் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது என்று கூறினார். அவரிடம் நான் என் அப்பா பெயர் கேட்டேன். அது தெரியவில்லை என்கிறார். என் அப்பா பெயர் தெரியாமல் என் மீதுள்ள வழக்குகள் சொல்ல முடியுமா என்று கேட்டேன். அது எல்லாம் தெரியாது நான் கழக வழக்கறிஞர் என்கிறார்.
கழக வழக்கறிஞர் என்றால் கழக தோழர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் எந்த ஒரு பெண் கட்சியில் வேலை பார்க்கிறாரோ அவரை தவறாக பேசுவதுதான் வழக்கறிஞர் பணி என்பது இப்போதுதான் புரிகிறது. வழக்கு குறித்த ஆவணங்கள் கேட்டாலும் கொடுக்கவில்லை. அதேநேரத்தில் என் மீது எந்த வழக்கும் இல்லை என்பதற்காக காவல்துறையின் வெரிஃபிகேஷன் சர்டிஃபிகேட் என்னிடம் உள்ளது. இதை ஆனந்த் சாரிடம் காட்டியபோதும் உரிய பதில் இல்லை.

என்னைப் பற்றி தவறாக பேசுகிறார்கள் என்று கூறியதற்கும் ஆனந்த் சார் எதுவும் சொல்லவில்லை. அவர் ஏன் கேட்கவில்லை. அவரது வேலைதான் அவருக்கு முக்கியமாக தெரிகிறது. நாங்கள் யாருக்காக வேலை பார்க்கிறோம். வேலை பார்த்தவர்களுக்கு இங்கு என்ன அங்கீகாரம் உள்ளது. உழைத்தவர்களை அசிங்கப்படுத்துகிறார்கள். உழைத்ததே தவறு என்று தோன்றுகிறது.
தலைமை வரை என்னை தெரிகிறது என்பதுதான் பிரச்னையே. அட்மின் ஜெகதீஷ் அண்ணா என் பிறந்தநாளுக்கு நன்றாக வேலை செய்கிறீர்கள் என என்னை வாழ்த்தினார். இங்கு அதுதான் பிரச்னை. நாளை என் வேலையை பார்த்து தளபதியே அங்கீகரித்தாலும் பிரச்னை தானா. தளபதியின் முகத்துக்காக தான் வேலை பார்த்தோம். உண்மையில் எங்களை வேலை செய்ய விடவில்லை.
இவர்கள் கொடுத்த மன உளைச்சலால் நான் வேலை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். இப்போது ஆனந்த் சார், நான் கொடுத்த வேலையை நீ சரியாக பார்க்கவில்லை. தளபதி நாளை என்னை தவறாக நினைப்பார் என்று சொல்லி அரசியல் செய்கிறார். பல்வேறு சவால்களை கடந்து இவ்வளவு களப்பணி செய்கிறோம். என்னை நம்பி 800 மகளிர் நிர்வாகிகள் உள்ளனர். தளபதி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நல்லது செய்வார் என்று நம்பிதான் இருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துவிட்டது. எல்லோரும் பின் வாங்கிவிட்டனர். பல தருணங்களில் அனைவரும் உழைத்தாலும் அவர்கள் பெயர்கள் மேலே செல்வதில்லை. நான் தனிப்பட்ட ரீதியாக செய்த பணிகளை லெப்ட் பாண்டி, இது நான் சொல்லித்தான் செய்வதாக சொல்லு என்று கூறுகிறார். உழைப்பை திருடுவதை என்னவென்று சொல்வது. உறவினர்களுக்கும், ஒரே சாதிக்காரர்களுக்கும் தான் அங்கீகாரம் கிடைக்கிறது. உழைக்கும் யாருக்கும் அங்கீகாரம் கிடையாது.
இது தளபதிக்கு துளி கூட தெரியாது. அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னைப்பற்றி தவறாக சித்தரிக்கிறார்கள். பதவிக்காக இதை செய்பவர்கள், நாளை அந்தப் பதவியை தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் மக்கள் சேவை எல்லாம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை. மாவட்ட செயலாளர்கள் அவர்களின் உறவினர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
அப்படியென்றால் தளபதியை நம்பி இத்தனை ஆண்டுகளாக வேலை பார்த்த எங்களின் நிலைமை என்ன. இங்கு இல்லாவிடினும் வெளியில் சென்று தளபதியின் பெயரை சொல்லி மக்களுக்கு நல்லது செய்வேன். தளபதி வழியில் மக்களுக்கு நல்லது செய்வது என் கனவு. அதை கட்சி பெயரில் தான் செய்ய வேண்டும் என்றில்லை. இது தளபதிக்காக எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
அவரின் காதுக்கு எதுவும் செல்லாது என்று தெரிந்துதான் இதை செய்கிறார்கள். அவரின் கவனத்துக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. எனக்கு பதவி வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. பதவியே கொடுத்தாலும் இந்தப் பிரச்னை சரியாகாது. பதவி வந்தாலும் என்னை வேலை பார்க்க விட மாட்டார்கள். அதனால் எனக்கு பதவியும் தேவையில்லை. இதுக்கு வேறு யாராலும் தீர்வு கொடுக்க முடியாது. தளபதியால் மட்டும் தான் தீர்வு கிடைக்கும். அந்த தீர்வை கொடுத்தால் போதும்." என்றார்.












Click it and Unblock the Notifications