ஊரில் இல்லாத அதிசயம்... சிலிண்டரிலும் கலப்படம்... தண்ணீரை நிரப்பி விற்பனை
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கேஸ் சிலிண்டரில் கேஸுக்கு பதில் தண்ணீரால் நிரப்பப்பட்ட சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் வசிப்பவர் வீரம்மாள். இவர் வீட்டுக்கு அண்மையில் பாரத் கேஸ் நிறுவனத்தின் சிலிண்டர் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. இதை கேஸுடன் வீரம்மாள் இணைத்தார்.
எப்போதும் ஒரு சிலிண்டர் 45 நாட்களுக்கு வரும் நிலையில் புதிய சிலிண்டர் பூட்டிய 15 நாட்களிலேயே அடுப்பு எரியாமல் போய்விட்டது. அடுப்பில் பிரச்சினை இருக்கும் என கருதி அடுப்பை சரி செய்து பார்த்தார்.
எனினும் அடுப்பு எரியாததால் குடும்பத்தினர் குழப்பமடைந்தனர். இதையடுத்து சிலிண்டரை ஆய்வு செய்து பார்த்ததில் அதில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறுகையில் சிலிண்டரில் தண்ணீர் கலப்படம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உணவு பொருட்கள், குழந்தை குடிக்கும் பால் என கலப்படம் செய்து வந்த நிலையில் கண்ணுக்கு தெரியாத காற்று நிரப்பப்பட்ட சிலிண்டரிலும் தண்ணீர் கலந்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.