ஓபிஎஸ் திடீர் ஆவேசத்துக்கு காரணம் இதானா? பின்னணியில் ‘2 பெரிய தலைகள்’.. மெகா பிளானுடன் பன்னீர்!
தேனி : இதுவரை இணக்கமாகச் செல்வது குறித்தே பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென சவால் விடுத்துப் பேசியிருப்பதற்குப் பின்னணியில் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் துவங்கிய நாள் முதல், இணைந்து செயல்படுவோம் என்றே கூறி வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருப்பது ஒரு காரணம்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு லேசாக திசையை மாற்றி இருந்தாலும் கூட இது ஓபிஎஸ்ஸுக்கு முழுமையான வெற்றி எனச் சொல்வதற்கில்லை. ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு நாளை வர இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்திற்கு வரட்டும் என பகிரங்க சவால் விட்டிருப்பதற்குப் பின்னணியில், தினகரன், திமுகவின் ஆதரவும், ஒரு மெகா பிளானும் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஓபிஎஸ் அணிக்கு தாவும் நிர்வாகிகள்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்குச் சென்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பலர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் பல புள்ளிகள்
மேலும், முன்னாள் அமைச்சர்கள் பலருடனும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பனை தொடர்ந்து தற்போதைய எம்.எல்.ஏக்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களுடனும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம். அவர்களில் பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவ ரெடியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. நாளை வரும் தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில், கூண்டோடு மாறும் திட்டத்தில் பலர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சவால் விட்ட ஓபிஎஸ்
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். பதவி ஆசை இல்லாத என்னை அதற்காக ஆசைப்படுபவன் என்று கூறுகிறார்கள். வேண்டுமானால், கட்சி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்யட்டும். இருவரும் தொண்டர்களை சந்திப்போம். தலைமை யார் என அவர்கள் முடிவு செய்யட்டும் என சவால் விடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

திடீர் மனமாற்றம்
அதிமுக மோதல் தொடங்கி இத்தனை வாரங்களாக, சாஃப்டாக பேசி வந்த ஓபிஎஸ், தீர்ப்புக்குப் பிறகும் கூட எடப்பாடி பழனிசாமிக்கு நட்புணர்வோடு அழைப்பு விடுத்த ஓபிஎஸ் திடீரென ஆவேசமாக சவால் விடுத்தது எடப்பாடி தரப்புக்கும் ஷாக் கொடுத்தது. மேலும், தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் சொன்ன விஷயங்களை ஏற்றுக்கொள்ளாததே காரணம் என்றும் பல்வேறு விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார் ஓபிஎஸ்.

சவாலுக்கு காரணம்
ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரத் தயாரா என சவால் விட்டிருப்பதன் பின்னணியில், பாஜக, தினகரன், திமுக அளித்து வரும் ஆதரவு பலமே காரணம் எனச் சொல்லப்படுகிறது. கட்சிப் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லும் ஓபிஎஸ், அடுத்து எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யுங்கள், உண்மையிலேயே மக்கள், தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது எனப் பார்த்துவிடலாம் என்றும் ஒரு அஸ்திரத்தை கையில் எடுப்பார் என்று கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

என்ன திட்டம்?
ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டு, இருவரும் ராஜினாமா செய்தால், ஓபிஎஸ்ஸின் போடி தொகுதியில் அவரை ஜெயிக்க வைக்க தினகரனும், திமுகவுமே களமிறங்குவார்கள். அதேசமயம், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்கவும் இணைந்து களமிறங்குவார்கள். இதற்கான உறுதியும், திமுகவிடம் இருந்தும் தினகரனிடம் இருந்தும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

திடீர் ஆவேசத்துக்குப் பின்னணி
ஓபிஎஸ் சவாலை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தால், ஓபிஎஸ் , திமுக மற்றும் தினகரன் ஆதரவோடு தாம் கரையேறி விடலாம் என கணக்குப் போட்டிருக்கிறார். சவாலை ஏற்காவிட்டாலும், அதையே மீண்டும் மீண்டும் சொல்லி, எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தலாம் என்றும் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாம். இதன் காரணமாகவே 'அமைதியோ அமைதி' என இருந்த ஓபிஎஸ் ஆவேச முகத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள்.

யார் வந்தாலும்
எடப்பாடி பழனிசாமி என்று இல்லை, அவருக்கு ஆதரவாக தினசரி பேசி வரும் மாஜிக்களில் யார் வீராவேசமாகப் பேசினாலும், இதே அஸ்திரத்தைக் கையாண்டு, அவர்களுக்கு தூபம் போடத் தயாராகிறதாம் ஓபிஎஸ் தரப்பு. ஈபிஎஸ் பிரச்சனையால் இடைத்தேர்தல் வந்தால் நமக்கு கைகொடுக்க திமுகவும், தினகரனும் இருக்கிறார்கள் என நம்பிக்கையோடு தனது ஆதரவாளர்களுக்கு சைகை காட்டியிருக்கிறாராம் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications