நெஞ்சே பதறுதே.. நெல்லையில் 3 வயது சிறுவன் கொடூர கொலை.. போலீசை கண்டதும் பதறி ஓடிய எதிர்வீட்டு பெண்
நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை எதிர்வீட்டை சேர்ந்த தங்கம்மாள் என்ற பெண் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனதாக பெற்றோர்கள் தேடிய நிலையில் சிறுவன் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவது மகனுக்கு 3 வயது ஆகிறது. 3 வயது சிறுவன் அங்கன்வாடி மையத்துக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று சிறுவனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல ரம்யா சிறுவனை தேடியுள்ளார். காலை 9.30 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவனை காணவில்லை. இதனால் அவரது தெரு முழுவதும் தேடிப்பார்த்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையத்துக்கும் சென்று தேடியுள்ளார். ஆனால் அங்கேயும் சிறுவன் இல்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் சிறுவனை காணாதது குறித்து கூறியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
இதையடுத்து விக்னேஷ் மற்றும் ரம்யா இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சிறுவனுக்கு என்ன ஆனது? எங்கே சென்றான் என்று தெரியவில்லை. இதையடுத்து போலீசார் ஒவ்வொரு வீடாக சென்று விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது விக்னேஷ், ரம்யா தம்பதியின் எதிர்வீட்டில் சென்று போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த தங்கம்மாள் என்ற பெண் போலீசை கண்டதும் பதற்றத்துடன் வெளியே ஓடினார். இதனால் சந்தேகமடைந்து போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ரத்தக்கறையுடன் ஒரு சாக்குப்பை இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்த போது சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சிக்குள்ளான போலீசார் உடனடியாக அந்த பெண்ணை ஓடிசென்று பிடித்தனர்.
இதற்கிடையே சிறுவன் பிணமாக மீட்கப்பட்டதை பார்த்ததும் சிறுவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். சாலையில் உருண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து தங்கம்மாள் என்ற அந்த பெண்ணை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், தங்கம்மாளுக்கும் முன்பு மகன் இருந்துள்ளான்.
ஆனால் அந்த மகன் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டான். மகன் இறந்ததில் இருந்தே அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், லேசான மனவளர்ச்சி குன்றி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மகன் உயிரிழந்த ஈம சடங்கிற்கு எதிர்வீடான விக்னேஷ் - ரம்யா தம்பதி வரவில்லையாம். இதனால் அவர் மீது முன்விரோதம் இருந்ததாகவும், மகன் இறந்த பிறகு தங்கம்மாள் அந்த வீட்டில் தனியாக தான் வசித்து வந்துள்ளாராம். அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசாமல் தான் இருந்ததாக அங்குள்ளவர்கள் கூறினர்.
இதற்கிடையே எங்கள் மகனை தங்கம்மாள் தான் கொலை செய்துள்ளார் என்று அடித்து கூறினர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கதறி அழுதனர். தங்கம்மாள் எதற்காக கொலை செய்தார் என்றும், அவர் மட்டும் தனியாக இந்த கொலையை அரங்கேற்றினாரா? இதற்கு பின்னால் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை அருகே வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications