தமிழக சட்டசபை தேர்தலுக்கு செம்ம ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜக.. முருகன் சொன்ன லிஸ்டை பாருங்க!
நெல்லை: தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக அதிரடியாக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. தற்போது பூத் கமிட்டிக்கு ஆட்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தகவலை பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.
நெல்லை வண்ணார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நெல்லை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி தலைமை தாங்கினார்.
Recommended Video
இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் எல். முருகன். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
20 சதவீத பணிகள்
செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், "ஜனவரி 18 முதல் 25 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது. 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைகான பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 80% பூத் கமிட்டி பணிகள் தற்போது முடிவு பெற்றுள்ளது இன்னும் 20% பணிகள் 5 நாட்களில் முடித்துவிடுவோம். வரும் 25 ம் தேதிக்குள் 30 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
சுற்றுப்பயணம்
வரும் 30 ம் தேதி ஜே பி. நட்டா மதுரை வருகிறார். பல்வேறு அரசியல் ஆலோசனை கூட்டம் தேசிய தலைவர் தலைமையில் நடத்த இருக்கிறோம் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் நடத்துகிறோம். கட்சியில் உள்ள அணிகள் சார்பில் பல மாவட்டங்களில் மாநாடு நடக்கிறது.
ராஜ்நாத் சிங்
வருகிற 6 ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடக்கும் இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொள்கிறார் .14 ம் தேதி ராமநாதபுரத்தில் மகளிரணி மாநாடும் ,சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பட்டியலணி மாநாடு,மார்ச் மாதத்தில் பாஜக மாநில மாநாடு நடத்த இருக்குறோம் என தெரிவித்தார்.
வெற்றி வாய்ப்பு
இதனிடையே பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி பேசுகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கட்சியை பலபடுத்தி வருகிறோம். ABC என மூன்று பிரிவுகளாக பிரித்து தொகுதியில் பணிகளை செய்துவருகிறோம். A பிரிவில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியாகவும் B பலபடுத்தவேண்டிய தொகுதி,C பலவீனமான தொகுதி என பிரித்து பணிகள் நடந்து வருகிறது. வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம் என்றார்.