திருநெல்வேலி அல்வா அல்ல.. மத்திய அரசு கொடுக்கும் அல்வாவே ஃபேமஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 2 சிப்காட் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று மத்திய அரசு ஒதுக்கிவிட்டதாக கூறிய மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி அல்வாவை விடவும் மத்திய அரசு கொடுக்கும் அல்வா ஃபேமஸாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் முடிவுற்ற ரூ.1,679 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதேபோல் ரூ.1,061 கோடியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்புயாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கட்டப்பட்ட ரூ.77.02 கோடி மெகா உணவு பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித்தேர்
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. ஓராண்டு, ஈராண்டு அல்ல.. 17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன். நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக் கிடந்த மேற்கு, தெற்கு வாசல்கள் திமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. வரும் நவம்பர் மாதத்திற்குள் நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித்தேர் ஓடும்.
புதிய திட்டங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக இரு சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். அதேபோல் பாளையங்கோட்டையில் Y வடிவிலான ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பாபநாசம் கோயில் வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதேபோல் மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். இந்த திட்டங்களுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
மழை பாதிப்பு
2023ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் எவ்வளவு பாதிப்புகளை சந்தித்தது என்று அனைவருக்கும் தெரியும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டோம். ஆனால் மத்திய அரசு இடைக்கால நிதியை கூட கொடுக்கவில்லை. நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடி நிதியில், ஒரு சதவிகிதம் கூட கொடுக்கவில்லை.
திருநெல்வேலி அல்வாவும், மத்திய அரசு அல்வாவும்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். இந்திய வரைப்படத்தில் தமிழ்நாடு இருந்தால் போதுமா? மத்திய பட்ஜெட்டில் இருக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க வந்தால் மட்டும் போதும் என நினைக்கிறார்களா? இதுவரை திருநெல்வேலி அல்வா தான் உலகம் முழுவதும் ஃபேமஸ். ஆனால் இப்போது மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் ஃபேமஸாக உள்ளது.












Click it and Unblock the Notifications