பெண் எஸ்.ஐ கழுத்தில் சரமாரி கத்தி குத்து.. பரபரத்த முதல்வர் ஸ்டாலின்.. போனில் நலம் விசாரிப்பு
திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். மார்க்ரெட் தெரசாவிற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதோடு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மார்க்ரெட் தெரசா நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

சப் இன்ஸ்பெக்டர் காயம்
சப் இன்ஸ்பெக்டருக்கு இடது கன்னம், இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. ரத்தப்போக்கு அதிகரித்தது. அவரை அருகில் இருந்த சக போலீசார் உடனடியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
Recommended Video

ஆறுமுகம் கைது
இதனையடுத்து ஆறுமுகத்தை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து உதவி ஆய்வாளர் அவருக்கு அபராதம் விதித்துள்ளார்.

பழைய பகை
அந்த பகையை மனதில் வைத்து கொண்டு நேற்று மார்க்ரெட் தெரசா பணியில் இருந்தபோது தன் கையில் வைத்திருந்த சின்ன கத்தியால் அவரை குத்தியுள்ளார் ஆறுமுகம். கோவில் விழாவில் பெண் சப். இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னருக்கும் காவல்துறையினருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
இந்த நிலையில், நெல்லையில் தாக்கப்பட்ட எஸ்.ஐ. மார்க்ரெட் தெரசாவிடம் போனில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்..சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கத்தியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ-க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கழுத்தில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் சப் இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவிற்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications