நெல்லை அருகே கோயில் திருவிழாவில் மனித தலையுடன் சாமியாடிய சம்பவம்.. அதிரடி காட்டிய போலீசார்
நெல்லை: நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அருகே அமைந்துள்ள உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசுவாமி கோயில் விழாவில் மனித தலையுடன் சாமியாடியவர்கள் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெள்ளாங்குழி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் பக்தர்கள் சாமியாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோவில் நள்ளிரவு நேரத்தில் சாம கொடைக்கு வேட்டை சென்றுவிட்டு கோயிலுக்கு திரும்பி வந்த சாமியாடிகள் சிலர் பாதி எரிந்த நிலையில் மனித தலை, கை, கால் போன்ற உறுப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு சாமியாடும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இதனை அங்குள்ள பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தனர். பலர் தங்கள் செல்போனில் வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே நடந்துள்ளது.
வீரவநல்லூர் அருகே உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவில்தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், அந்த கிராம நிவாக அலுவலர் இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரை அடுத்து, 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் சுடலை மாடன் சுவாமி கோயில்களில் சாமக் கொடைக்காக இரவு மயானம் செல்வது வழக்கம். அப்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. எனினும், சமீப காலமாக மயானத்திற்கு மட்டும் சாமி வேட்டைக்கு சென்று வரும் வழக்கம் உள்ளது.
ஆனால் ஒரு சில இடங்களில் இப்படி மயானத்திற்கு சென்று வரும் போது மனித உடல்களின் எச்சம், எலும்புகளை எடுத்து வரும் நிகழ்வு நடைபெறுகிறது. பெரும்பாலான ஊர்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இல்லை. சாமியாடிகள் எலும்புகளை வைத்து சாமியாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருப்பதால் இந்த விவகாரம் தேவையில்லாமல் பெரிது படுத்தப்பட்டு விட்டது" என்று தெரிவித்தனர்.
எனினும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சிலர் கூறும் போது, "இதுபோன்ற செயல்களை பார்க்கும் போது அதிர்ச்சி அளிப்பதாகவும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications