“துலுக்கர்பட்டி” அள்ள அள்ள குறையாத அமுதசுரபி.. அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
நெல்லை: அள்ள அள்ள குறையாத அமுதசுரபி துலுக்கர்பட்டி என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தங்கம் தென்னரசு.
தமிழர்களின் நாகரீகமும், தமிழ் மொழியும் தொன்மையானது என்பதை உலகறியச் செய்யும் வகையில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்றுப் படுகையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடந்த பணியின்போது ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த மாதம் 6ஆம் தேதி 2-வது கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிலையில், துலுக்கர்பட்டி அகழாய்வு பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!
— Thangam Thenarasu (@TThenarasu) July 4, 2023
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன். அதனைத்… pic.twitter.com/rvnGsVLnp6
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், "அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் 'புலி' என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் 'திஈய', 'திச', 'குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்." எனத் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications