நாங்குநேரி மாணவருக்கு.. வெற்றிகரமாக நடந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை.. சாதித்த ஸ்டான்லி டாக்டர்கள்
திருநெல்வேலி : சக மாணவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரை கைகளில் 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள்.
முகம் முதல் கைகள் வரை பல இடங்களில் வெட்டுகாயம் விழுந்த நாங்குநேரி மாணவரை காப்பாற்ற சென்னையின் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மாணவனை காப்பாற்றி பழையபடி மீட்டெடுக்க தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெரு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திராசெல்வி ஆகியோரை சகமாணவர்கள் சாதிய வெறியிலும் முன்விரோதத்திலும் வெட்டினர் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து,மாணவர் சின்னத்துரைக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீதேவி தலைமையில் டாக்டர்கள் மகேஷ், ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திருநெல்வேலிக்கு வந்தனர். அவர்கள், நேரடியாக பாளையங்கோட்டை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெறும் மாணவர் சின்னத்துரை பார்த்து உடல் நிலை மற்றும் எங்கெல்லாம் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதித்தனர்.
அவர்கள் பார்த்த போது, மாணவரின் இடது கையில் 3 இடங்களிலும், வலது கையில் ஓரிடத்திலும் ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவக்குழுவினர், மாணவர் சின்னத்துரைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள். இதன்படியே மாணவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நேற்று தொடங்கி, வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இது தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் ரேவதி பாலன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது, "மாணவர் சின்னத்துரைக்கு எலும்பு முறிவுக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நாங்கள் மாணவரின் இரு கைகளிலும் ஏற்பட்ட காயங்களை ஆய்வு செய்தோம். தற்போது மாணவருக்கு உரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
மாணவர் சின்னத்துரைக்கு தசைநார்கள், ரத்தக்குழாய்கள், நரம்புகளிலும் காயம் இருந்தது. அவற்றை இணைக்கும் முக்கிய பணிகளை நேற்று செய்து முடித்தோம். இடது கையில் 3 இடங்களிலும், வலது கையில் ஓரிடத்திலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. மொத்தம் 7 முதல் 8 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. நிபுணர் குழுவினர் தொடர்ந்து மாணவரை கண்காணித்து வருகின்றனர்.
மாணவர் சின்னதுரைக்கு குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஓய்வு தேவையாகும். 4 வாரத்துக்கு மாணவர் கைகளில் கட்டுப்போட்டவாறுதான் இருப்பார். அதன்பிறகே நாங்கள் மேற்கொண்டுள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் அடுத்தகட்ட நிலை தெரிய வரும். தற்போது மாணவர் சின்னத்துரை மற்றும் தமிழ்செல்வி ஆகியோரை கிருமித்தொற்று வராத பாதுகாப்பான அறையில் வைத்துள்ளோம்" இவ்வாறு மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர். மாணவர் சின்னத்துரையும், அவரது தங்கை மாணவி தமிழ்செல்வியும் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications