மோடி தான் காரணம்.. துணை ஜனாதிபதியாகும் சிபி ராதாகிருஷ்ணன்.. நெல்லையில் அமித்ஷா சொன்ன வார்த்தை
திருநெல்வேலி: தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியை பாஜக கூட்டணி தான் ஜனாதிபதியாக்கியது. இப்போது இந்த மண்ணை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக பிரதமர் மோடி, ஜேபி நட்டா ஆகியோர் முன்நிறுத்தி உள்ளனர் என்று திருநெல்வேலியில் நடந்த பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் இன்று நடந்தது.

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அமித்ஷா கூறியதாவது:
நெல்லை மண் வீரம், பண்பாடு, கலாச்சாரம் மிக்கது. சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக முன்நிறுத்தி உள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி தான் சபாநாயகராக இருப்பார். அந்த சபாநாயகராக இந்த மண்ணை சேர்ந்த திருமகன் தான் வீற்றிருக்க போகிறார்.
முதலில் நம்முடைய கூட்டணி சார்பில் தமிழக விஞ்ஞானியான அப்துல் கலாமை ஜனாதிபதி பதவியில் அமர வைத்து அழகு பார்த்தோம். பிரதமர் மோடி, எப்போதும் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்தவராக தான் இருந்து வருகிறார். தமிழ் மொழி, மண், பண்பாடு, கலாசாரத்தை போற்றுகிறார்.
இப்போது தான் தஞ்சையில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலை நிறுவி மாபெரும் விழாவை பிரதமர் மோடி எடுத்தார். பிரகதீஸ்வரர் கோவிலில் கங்கை நீரை கொண்டு வந்து அபிசேகம் நடத்தினர். காசி தமிழ் சங்கம் ஆண்டு ஆண்டு நடந்து வருகிறது. சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினார். தெய்வ புலவர் திருவள்ளூரின் திருக்குறளை 13 மொழிகளில் மொழி மாற்றி புகழ் சேர்த்துள்ளார்.
அப்பாவிகளை மதத்தின் பெயரில் கொலை செய்த துயர நிகழ்வு பஹல்காமில் நடந்தது. இந்த தீவிரவாத தாக்குதலை வேரோடு அழிப்போம் என்று மோடி சபதம் ஏற்றார். தீவிரவாதிகளை வீடு புகுந்து அழித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலமாக தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடைத்துள்ளார். ஆபரேஷன் மகாதேவ் மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் அழிக்கப்பட்டனர். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் வழி நின்று மோடி ஆட்சியை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications