எக்ஸாம் டைம்! ஒழுங்கா படிங்க! ஜாதி சண்டையெல்லாம் கூடாது! நெல்லை பிளஸ் 2 மாணவர்களை எச்சரித்த நீதிபதி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாதி ரீதியாக பிளஸ் 2 மாணவர்கள் மோதி கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தேர்வுக் காலம் என்பதால் அவர்களை எச்சரித்த நீதிபதி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
நெல்லையில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், 12 ஆம் வகுப்பு மாணவர்களை அவதூறான வார்த்தைகளை சொல்லி பள்ளி மேஜைகளில் எழுதி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள், 11 ஆம் வகுப்பு மாணவர்களிடம் தட்டி கேட்டனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டை மேலும் தீவிரமடைந்தது. இந்த சண்டையில் ஜாதி ரீதியாக மோதிக் கொண்டதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.
இவர்கள் 4 பேரையும் போலீஸார் நெல்லை இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர் செய்தனர். அப்போது நீதிபதி, "இது தேர்வு காலம். ஒழுங்காக படிக்க வேண்டும். இனி இது போன்று ஜாதி ரீதியிலான எந்த சண்டைகளிலும் ஈடுபடவே கூடாது" என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அந்த மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications