திசையன்விளையில் நடந்தது ஆணவ கொலைதான்.. கருப்பு டிரஸ்ஸில் 6 பேர்.. பைக்கில் போனாங்க: பெற்றோர் உறுதி
நெல்லை: கருப்பு உடை அணிந்து கொண்டு வந்த 6 பேர் எங்கள் மகன் சடலமாக கிடந்த இடத்தை விட்டு வேகமாக தப்பி சென்றதை நாாங்கள் பார்த்தோம் என நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் அவருடைய பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
திசையன்விளையை அடுத்த அப்புவிளையைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா (19). இவர் அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரோடு பணிபுரிந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் முத்தையாவை பார்க்க அந்த பெண் அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மாலையில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டில் கொண்டு போய் முத்தையா விட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே பணிபுரியும் நிறுவனத்திற்கு வந்த அந்த பெண்ணின் அக்காவும் கணவரும் முத்தையாவிடம் காதலை விட்டுவிடுமாறு எச்சரிக்கை விடுத்து கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்றயை தினம் இரவு முத்தையா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக முத்தையாவின் நண்பர்களான மதியழகன், சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக முத்தையா படுகொலை செய்யப்பட்டார் என போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் முத்தையாவின் பெற்றோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு சமுதாயத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே காவல் துறையினர் ஒரு தலை பட்சமாகவே நடந்து கொள்கிறார்கள். எங்களை கட்டாயப்படுத்தி உடலை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள்.
திசையன்விளை பேரூராட்சி தலைவரின் கணவர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் ரூ 3 லட்சம் பணம் வாங்கித் தருகிறோம், அதை வாங்கிக் கொண்டு உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த சம்பவத்தில் கைதான நபர்களுக்கும் என் மகன் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்.
மதியானம் எங்கள் வீட்டுக்கு அந்த பெண், என் பையனுடன் வந்தாள். இருவருக்கும் நான்தான் உணவு பரிமாறினேன். அப்போது என் மகன்தான் அந்த பெண்ணுக்கு ஊட்டி விட்டான். இதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுவிட்டுவிட்டு வருவதாக சென்றான். மீண்டும் வீட்டுக்கு வந்தான். இரவு 7 மணிக்கு செல்போனில் பேசியபடியே நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறினான்.
ஆனால் இரவு 9 மணிக்கு என் மகன் இறந்துவிட்டான் என போன் வந்தது. நாங்கள் அவனுடைய நம்பருக்கு போன் செய்தால் எடுக்கவில்லை. உடனே பதறியடித்து கொண்டு எங்கள் மகனை தேடினோம். அப்போது காரம்பாடு ஓடை பகுதியில் அவனுடைய சடலம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு போய் பார்த்தபோது என் மகன் கழுத்து வயிறு, முதுகு பகுதிகளில் குத்தப்பட்டு இறந்து கிடந்தான்.
கழுத்தில் இருந்த பாசி மணியை அறுத்து அவனை கொலை செய்துள்ளனர். ஏதோ தீவிரவாதியை போல் என் மகனை கொலை செய்துவிட்டார்கள். என் மகனை தேடி போன இடத்தில் 6 பேர் கருப்பு உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார்கள். அங்கேயே கத்தி இருந்தது, என் மகனின் செருப்பு இருந்தது. ஒரு சாதாரண காதல் விஷயத்திற்கு போய் தீவிரவாதியை போல் கொன்றிருக்கிறார்கள். என் மகனுக்கு நடந்தது அடுத்து வேறு யாருக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம். இவ்வாறு பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications