‛அதை உடனே வாங்கிட்டு வாங்க’.. கையை காட்டிய பிரதமர் மோடி! ஓடிச்சென்ற பாதுகாவலர் - நெகிழ்ந்த நெல்லை
திருநெல்வேலி: பிரதமர் மோடி இன்று திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் தனது காரின் படியில் நின்று தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி ஊர்வலமாக சென்றார். இந்த சமயத்தில் பிரதமர் மோடி செய்த செயல் பாஜக தொண்டர்களை நெகிழ வைத்தது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ‛என் மண் என் மக்கள் யாத்திரை' நிறைவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதன்பிறகு பிரதமர் மோடி மதுரை சென்றார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நேற்றிரவு பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு மதுரையில் ஓய்வெடுத்த பிரதமர் மோடி இன்று காலையில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
இந்த விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எவ வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழியும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசியபோது பிரதமர் மோடி எவ வேலு, கனிமொழி எம்பி ஆகியோரின் பெயர்களை கூறாமல் பேசியது விவாதத்தை கிளப்பியது.
அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து பிரதமர் மோடி திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது "திருநெல்வேலி அல்வாவை போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி. தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்.
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி பற்றி கேட்டால் திமுகவினரிடம் பதில் இருக்காது. எனக்கு தமிழ்மொழி தெரியாது. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கின்றேன். சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவி வகிக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும்'' என பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடி திருநெல்வேலியில் காரில் ஊர்வலமாக சென்றார். காரின் படியில் பிரதமர் மோடி நின்று தன்னை பார்க்க வந்திருந்தவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தபடி சென்றார். அப்போது பிரதமர் மோடியை நோக்கி பாஜகவினர் மலர்தூவினர். மோடி.. மோடி.. என கோஷமிட்டனர். இந்த வேளையில் ஓவிய பயிற்சி மாணவர்கள் பிரதமர் மோடியை ஓவியமாக வரைந்து எடுத்து வந்திருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை பார்த்து அந்த ஓவியத்தை தூக்கிப்பிடித்து காண்பித்து வரவேற்றனர். இதனை கவனித்த பிரதமர் மோடி உடனடியாக தனது பாதுகாவலரிடம் ஓவியத்தை வாங்கி வரும்படி கூறினார். இதையடுத்து பாதுகாவலர் மாணவர்கள் வைத்திருந்த பிரதமர் மோடியின் ஓவியத்தில் ஒன்றை வாங்கி சென்றார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications