பாமக உட்கட்சி பிரச்சனைக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: பாமகவுக்குள் உட்கட்சி பூசல் பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், பாமகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்சனைக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணிப்பேட்டையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. காவல் துறையினர் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதலமைச்சர் மார்தட்டி பேசுகிறார். இது போன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்றிருக்க வேண்டும். அதே சமயம் தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இதுபோன்ற கருத்துக்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.
கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு பிரச்சனை வந்தது என்று கூறியுள்ளார். இது தேவையில்லாத பேச்சு. யாருடைய பூர்வீகத்தை எடுத்துப் பார்த்தாலும் பல்வேறு பிரச்சனைகள் வரும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றபோது அங்கே இருப்பவர்கள் ஜெயலலிதாவிடம் கன்னடம் வாழ்க என்று கூற சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் ஜெயலலிதா உயிரே போனாலும் சொல்லமாட்டேன் என்று கூறினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானை உள்ளது. அதை நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். விதிமுறைகள் பின்பற்றி முதலமைச்சரிடம் பேசி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதலுக்கு பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்பும் கிடையாது. பின்னணியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி பிரச்சனை. அதைப்பற்றி கருத்து கூறவும் முடியாது.
பா.ம.க. மோதல் விவகாரத்தை சமாதானம் செய்ய நாங்கள் முயற்சி எடுக்கவில்லை. உட்கட்சி பிரச்சனைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் யார் என்பதை நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications