ஜாகிர் உசேன் கொலையில் 16 வயது மாணவன் கைது.. நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு ‘துப்பு’.. விசாரணையில் ஷாக்!
நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலி கொலையில், கொலையாளிகளுக்கு துப்பு கொடுத்த +1 படிக்கும் பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ ஜாகீர் உசேன் பிஜிலி டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்துவல்லியாக இருந்து வந்தார். ரம்ஜான் நோன்பை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி அதிகாலை பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜாகிர் உசேனை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பல் அவரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபிக் என்பவருக்கும் ஜாகிர் உசேனுக்கும் இடையேயான நிலப் பிரச்னையில் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கொலை நடந்த அன்றே நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
கார்த்திக், அக்பர் ஷா ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. ஜாகிர் உசேன் தொழுகை முடித்து எந்த வழியாக தினமும் செல்வார் என்பது குறித்து நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு செல்போனில் அந்த 11வது வகுப்பு மாணவன் தகவல் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து அந்தச் சிறுவனிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளான் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த மாணவனையும் இந்த வழக்கில் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மனைவியான நூர் நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதால் தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து அவரைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் மகன் இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் இன்று எங்களது வீட்டை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். நான் வெளியே வந்ததும் அவர் ஓடி விட்டார். அடுத்து அவர்கள் என்னை கொல்ல நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. சாவை நினைத்து நாங்கள் பயப்படவில்லை அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம்" எனப் பேசியுள்ளார். முன்னதாக , ஜாகீர் உசேன் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications