கையை நீட்டிய ஆளுநர்.. கண்டுகொள்ளாத மாணவி! பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அரங்கேறிய காட்சி!
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது ஆராய்ச்சி மாணவி ஒருவர் தனது பட்டத்தை ஆளுநரிடம் வழங்காமல் துணைவேந்தரின் கையில் வழங்கி பெற்றுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் தமிழர் நலன்களுக்கு எதிராக செயல்படுவதால் அவர் கைகளில் பட்டத்தை வாங்க தான் விரும்பவில்லை என அவர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் ஒன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம். தென் மாவட்டங்களில் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் இந்த பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற.து இதில் தமிழ்,நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர் என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் 650 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான பட்டங்கள் வழங்கப்பட்டது.
மேடையில் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் துணைவேந்தர் என்.சந்திரசேகர் ஆகியோர் இருந்த நிலையில் தங்களது பட்டங்களை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மாணவிகள் ஆளுநரிடம் அதை காண்பித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து பல மாணவிகள் தங்களது பட்டங்களை ஆளுநரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்த நிலையில் ஆராய்ச்சி பட்டம் பெற வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டத்தை தராமல் நேரடியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்று விட்டு மேடையில் இருந்து இறங்கினார்.
முன்னதாக ஆளுநர் மாணவி வரும்போது கையை நீட்டி அவரது பட்டத்தை பெற முயன்றார். ஆனால் மாணவி அவரிடம் பட்டத்தை தராமல் துணைவேந்தர் சந்திரசேகரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துவிட்டு கீழே இறங்கினார். இதனால் ஆளுநர் மட்டுமல்லாது மேடையில் இருந்தவர்களும் பட்டம் பெற வந்த சக மாணவ மாணவிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இருந்த போதும் ஆளுநர் ஒருவாறு சிரித்து சமாளித்து அந்த மாணவியை வாழ்த்தி அனுப்பினார்.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய மாணவி ஜீன் ஜோசப் ஆளுநர் தமிழ்நாட்டுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் நான் பட்டம் பெற விரும்பவில்லை. இதனால் தான் எனது பட்டத்தை துணைவேந்தரிடம் கொடுத்து வாங்கினேன் எனக் கூறியிருக்கிறார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications