8 மாதத்துக்கு முன் மரணமடைந்தவருக்கு கொரோனா ரிசல்ட்.. இறந்தவருக்கே ஷாக் கொடுத்த அரசு மருத்துவமனை!
தென்காசி: 8 மாதத்திற்கு முன்பு இறந்த போலீஸ் அதிகாரிக்கு தற்போது கொரோன ரிசல்ட் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அரசு மருத்துவமனை.
பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் 'கேப்டன்' விஜயகாந்த் நடித்த படம் ரமணா. ஊழலின் கொடிய கரங்கள் குறித்து மக்கள் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்த இந்த படத்தின் ஒரு காட்சியில் மருத்துவமனையில் இறந்தவரின் உடலை வைத்து அவர் உயிரோடு இருப்பதுபோல் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.

அரசு மருத்துவமனை செய்த காரியம்
இந்த காட்சியில் வருவதுபோல், 8 மாதங்களுக்கு முன்பு இறந்தவருக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்ததுபோல் ரிசல்ட் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளது ஒரு அரசு மருத்துவமனை. இறந்தவரே உயிரோடு எழுந்து வந்து '' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'' என்று கேட்கும் அளவுக்கு இப்படி ஒரு காரியத்தை அரங்கேற்றிய அரசு மருத்துவமனை எது? ஏன் இப்படி நடந்தது? என்பது குறித்து இப்போது காண்போம். தென்காசி மாவட்டம் சுரண்டையில் வசித்து வந்தவர் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த மகன்
அந்தோணிராஜின் மகன் வினோத்(30) தொழில் அதிபர் ஆவார். இவர் சென்னை மாடம்பாக்கத்தில் தனது மனைவி ஜென்சியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி வினோத் செல்போனுக்கு ஜென்சிக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக எஸ்.எம்.எஸ்.வந்துள்ளது. இதனை பார்த்த வினோத் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் பறந்து வந்த செய்திதான் வினோத்தை தூக்கி வாரிப்போட்டது

அதிகாரியின் கண்டிப்பு
. '' கடந்த 18-ம் தேதி உங்கள் தந்தைக்கு(அந்தோணிராஜ்) கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் உங்களது மனைவிக்கு(ஜென்சி) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு வாருங்கள்'' என்று தொலைபேசியின் வழி வந்த குரலில் மருத்துவமனை அதிகாரி கண்டிப்புடன் பேசினார்.

இங்க என்ன நடக்குது?
8 மாதங்களுக்கு முன்பே இந்த பூமியை விட்டு சென்ற தந்தைக்கு தற்போது கொரோனா நெகட்டிவ்; கடந்த சில மாதங்களாக தென்காசி பக்கமே செல்லாமல் சென்னையிலேயே தங்கி இருக்கும் மனைவி ஜென்சிக்கு கொரோனா தொற்று பாஸிடிவ் என சம்பந்தமே இல்லாமல் அதிகாரி கூறியதை கேட்டதும் வினோத் அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வார்? என்னய்யா நடக்குது இங்க? பல மாதங்களுக்கு முன்பு இறந்து போனவருக்கு தற்போது கொரோனா பரிசோதனையா? என்று இவங்களலாம் வச்சிகிட்டு சிரிக்கவா? இல்லை அழவா? என்று புலம்பியபடி மாவட்ட பொது சுகாதார இயக்குனர் மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஜி.எஸ். சமீரன் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை புகார் மனு மூலமாக கொட்டி தீர்த்தார்.

காரணம் என்ன?
அதாவது தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த சிலர் தங்களது உண்மையான முகவரியை கொடுக்காமல் வினோத் குடும்பம் தொடர்புடைய பெயரை, முகவரியை கொடுத்ததே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ''கடந்த வாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாவட்டத்தில் பரிசோதனை செய்த நபர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்து வருவதாகவும், கொரோனா பரிசோதனை செய்பவர்கள் இதுபோன்ற தவறான தகவல்களை வழங்குவது கிரிமினல் குற்றம் என்றும் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் ஜெஸ்லின் கூறினார்.

நியாயமான கேள்விதானே
இவ்வாறு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் பரிசோதனை செய்தவர்கள் தவறான தகவல் வழங்கியபோது, இதனை கூட சரிபார்க்காமல் கவனக்குறைவாக இருக்கும் அதிகாரிகளா பரிசோதனை முகாமில் பணியாற்றுகின்றனர் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications