தென்காசி கோவிலில் கோலாகல மாசி மக தேரோட்டம்.. பக்தர்கள் குவிந்தனர்
Recommended Video

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் வருடாந்திர மாசி மகம் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கடடுப்பாட்டில் இயங்கும் காசி விசுவநாதர் ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது.

வடக்கே உள்ள காசிக்கு நிகரானதாக கருதப்படும் தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு. அதே போல் இந்த ஆண்டிற்கான மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.நாள் தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும், ரிஷபம், யானை , பூங்கோயில் போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது.

மேலும் தினமும் சமய சொற்பொழிவுகள், ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழச்சிகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 9-ஆம் திருநாளான இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டுவந்த பக்தர்கள்,உள்ளூர் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி,அம்பாள் திருத்தேரை சன்னதி வீதிகளில் சிவ கோஷம் .முழங்க பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
ஆங்காங்கே பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மோர், சர்க்கரை பானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பு சக்திவேல், ஆய்வாளர் ஆடிவேல் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக சாமி தேர் சன்னதி வீதியில் செல்லும் போது கேபிள் வயர் தேரின் கும்பத்தில் சிக்கியதால் சிறிது நேரம் தேர் உலாவில் தாமதம் உருவானது.












Click it and Unblock the Notifications