திருச்செந்தூரை எங்கே கொண்டு போயிட்டாங்க பாருங்க! முறைகேடு தரிசனத்தை தடுத்த அதிகாரியையே அடித்த போலீஸ்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் காவல் துறையினர் முறைகேடாக தரிசனத்திற்கு அனுப்பியதைத் தடுத்த உள்துறை கண்காணிப்பாளரை காவலர்கள் கன்னத்தில் அறைந்தும், காலால் எட்டி உதைத்தும் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அன்று சந்திர கிரகணம் என்பதால் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், தரிசன வரிசைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

முறைகேடான தரிசனம்
மூத்த குடிமக்கள் வரிசையில் பாதுகாப்பு பணிக்காக நின்ற காவல் துறையினர் தங்களுக்கு வேண்டியவர்களை முறைகேடாக மூத்த குடிமக்கள் வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த கோவில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் அந்த பகுதிக்கு சென்று பக்தர்கள் முறைகேடாக செல்வதை தடுத்துள்ளார். இதனால் அங்கு இருந்த காவல் துறையினருக்கும் உள்துறை கண்காணிப்பாளர் விவேக்திற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்
மோதல் முற்றிய நிலையில், அங்கிருந்த காவலர் பிரபாகரன் என்பவர் கண்காணிப்பாளர் விவேக்கை தாக்கியுள்ளார். இதையடுத்து, கண்காணிப்பாளர் விவேக்கும் காவலரை திருப்பி தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காவலர் பிரபாகரன் கண்காணிப்பாளர் விவேக்கை கன்னத்தில் அறைந்தும், பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
10க்கும் மேற்பட்ட போலீஸ்
இதைத்தொடர்ந்து, கண்காணிப்பாளர் விவேக்கை அங்கிருந்த காவலர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சை
கண்காணிப்பாளர் விவேக் தாக்கியதாகக் கூறி காவலர் பிரபாகரனும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் காவல் துறையினருக்கும், அறநிலையத் துறையினருக்கும் மோதல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு விஜயலெட்சுமி என்ற பெண் கண்காணிப்பாளரை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. இது போன்ற மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையேயும், பக்தர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications