வெள்ளக்காடாக மாறிய திருநெல்வேலி நகரம்.. பலத்த மழையால் நெல்லை சீமையில் என்ன நிலை?
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை தொடங்கி இன்று காலைவரை விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. திருநெல்வேலி மாநகர பேருந்து நிலையம் இந்த மழையால் வெள்ளக்காடாக மாறியது. திருநெல்வேலி நகரத்தில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான சாரலாக ஆரம்பித்த மழை, அதன்பிறகு கனமழையாக மாறியது. பகலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனால் மழைக்கு பிறகு பலத்த மழை பெய்தது. இரவு வரை மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது.

இந்த மழையால் திருநெல்வேலி மாநகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் குளம்போன்று தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே திருநெல்வேலி முழுக்கவே சாலைகளில் பள்ளம் அதிக அளவில் ஏற்பட்டு கவலைக்கிடமாக உள்ள நிலையில், மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திருநெல்வேலி பேருந்து நிலையம் முழுமையாக தண்ணீரில் தத்தளிக்கிறது.
திருநெல்வேலி நகரில் மட்டுமின்றி அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மாதேவி, மானூர், வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்த காரணத்தால் அந்த பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இடைவிடாமல் மழை பெய்த காரணத்தால் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மதியத்துக்கு பிறகு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகளும் மாற்று தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. குற்றாலத்தில் நேற்று இரவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே கனமழை எச்சரிக்கை காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் மக்கள் யாரையும் உள்ளே விடவில்லை..

கனமழை காரணமாக செங்கோட்டை காவல் நிலைய சரகம், செங்கோட்டை நகரப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சாவூர் சிறிய குளமானது அதிகளவு மழையின் காரணமாக ஒரு ஓரமாக கரை உடைந்து தண்ணீர் வட புறம் உள்ள ஓடையில் வழியாகவும் ரோட்டிலும் சென்றது. தற்பொழுது தண்ணியானது குண்டாரை நோக்கி செல்கிறது.
இன்று களக்காடு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிஅறிவித்துள்ளார்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த 2024 நவம்பர் பருவத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும், இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது,. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, மணல்மேட்டில் 249 மில்லி மீட்டர் மழையும், திருநெல்வேலியில் 203 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென்காசியில் 230 மில்லிமீட்டர் மழையும், ராமநதி அணை பகுதியில் 238 மில்லிமீட்டர் மழையும், கடையநல்லூர் ஆயக்குடி பகுதியில் 312 மில்லி மீட்டர் மழையும். செங்கோட்டையில் 240 மில்லி மீட்டர் மழையும், குண்டாறில் 208 மில்லி மீட்டர் மழையும், பெரும்பாலான இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications