சிவனடியார்கள் தேவாரம் பாட.. மழையில் நடந்த வளைகாப்பு.. மண்டபத்தில் வெள்ளம்.. நெல்லையில் திகில்
திருநெல்வேலி: கொட்டிய மழையிலும் மண்டபத்திற்குள் வெள்ளம் சூழ்ந்த போதிலும் குறித்த நாளில் நேரத்தில் வளைகாப்பு நடத்தியுள்ளனர் ஒரு தம்பதியினர். திருநெல்வேலியில் நடந்த இந்த வளைகாப்பு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. ஒரு வருடம் முழுவதும் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொஞ்ச நஞ்ச மழையல்ல பேயாமல் பெய்த பெருமழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் 69 செமீ மழை பதிவாகியுள்ளது.

2 நாட்களுக்கு மேலாக விடாமல் மழை பெய்துள்ளதால் எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. திருநெல்வேலி நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தாலும் மழை வெள்ளத்திற்கு நடுவே வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. பகவதி தனது மனைவி பார்வதிக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிவனடியார்கள் திட்டமிட்டபடி தேவாரம், திருவாசகம் பாட வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் வானத்தை பொத்துக்கொண்டு ஊற்றியது போல மழை கொட்டத் தொடங்கியது.
மழை கொட்டிய போதும் நிகழ்ச்சியை நிறுத்தவில்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு வளையல் போட்டு சம்பிரதாயங்களை செய்தனர். மழையின் தாக்கம் அதிகம் இருந்ததால் மண்டபத்தினுள்ளும் தண்ணீர் புகுந்து. தண்ணீர் வருவதை பொருட்படுத்தாத சிவனடியார்கள் தொடர்ந்து தேவாரம், திருவாசகம் பாடிக்கொண்டிருந்தனர்.
வளைகாப்பு....
— 😇 ✍lαthα αѕhσkrαj 🇮🇳 (@TenthPlanet1) December 18, 2023
மழையாவது, புயலாவது வெள்ளமாவது... 😄
நெல்லைடா 💪💪 pic.twitter.com/Lr9zOie0aC
ஒரு கட்டத்தில் மழை அதிகரித்து வெள்ள நீர் மேடையை மூழ்கடித்த பின்னரே நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பகவதி பார்வதி தம்பதியினரின் வளைகாப்பு வரலாற்றில் இடம் பெற்று விட்டது. நேரம் செல்ல செல்ல மழை அதிகரித்து தற்போது அந்த மண்டபம் உள்ள பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications